சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Urdu   Cyrillic/Russian  
திருவிசைப்பா

Back to Top
கருவூர்த் தேவர்   திருவிசைப்பா  
9.008   கருவூர்த் தேவர் - கோயில்  
பண் -   (திருத்தலம் கோயில் (சிதம்பரம்) ; அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )

9.008 கருவூர்த் தேவர் - கோயில்   (கோயில் (சிதம்பரம்) )
கணம்விரி குடுமிச் செம்மணிக் கவைநாக்
   கறையணற் கட்செவிப் பகுவாய்
பணம்விரி துத்திப் பொறிகொள்வெள் ளெயிற்றுப்
   பாம்பணி பரமர்தங் கோயில்
மணம்விரி தருதே மாம்பொழில் மொழுப்பின்
   மழைதவழ் வளரிளங் கமுகந்
திணர்நிரை அரும்பும் பெரும் பற்றப் புலியூர்த்
   திருவளர் திருச்சிற்றம் பலமே. 

[1]
இவ்வரும் பிறவிப் பௌவநீர் நீந்தும்
   ஏழையேற் கென்னுடன் பிறந்த
ஐவரும் பகையே யார்துணை யென்றால்
   அஞ்சலென் றருள் செய்வான் கோயில்
கைவரும் பழனம் குழைத்தசெஞ் சாலிக்
   கடைசியர் களைதரு நீலம்
செய்வரம் பரும்பு பெரும்பற்றப் புலியூர்த்
   திருவளர் திருச்சிற்றம் பலமே. 

[2]
தாயினே ரிரங்குந் தலைவவோ என்றும்
   தமியனேன் துணைவவோ என்றும்
நாயினேன் இருந்து புலம்பினால் இரங்கி
   நலம்புரி பரமர்தங் கோயில்
வாயினே ரரும்பு மணிமுருக் கலர
   வளரிளஞ் சோலைமாந் தளிர்செந்
தீயினே ரரும்பு பெரும்பற்றப் புலியூர்த்
   திருவளர் திருச்சிற்றம் பலமே.

[3]
துந்துபி குழல்யாழ் மொந்தைவான் இயம்பத்
   தொடர்ந்திரு டியர்கணம் துதிப்ப
நந்திகை முழவம் முகிலென முழங்க
   நடம்புரி பரமர்தங் கோயில்
அந்தியின் மறைநான் காரணம் பொதிந்த
   அரும்பெறல் மறைப்பொருள் மறையோர்
சிந்தையில் அரும்பும் பெரும்பற்றப் புலியூர்த்
   திருவளர் திருச்சிற்றம் பலமே.

[4]
கண்பனி யரும்பக் கைகள் மொட்டித்தென்
   களைகணே ஓலமென் றோலிட்
டென்பெலா முருகும் அன்பர்தங் கூட்டத்
   தென்னையும் புணர்ப்பவன் கோயில்
பண்பல தெளிதேன் பாடிநின் றாடப்
   பனிமலர்ச் சோலைசூழ் மொழுப்பிற்
செண்பகம் அரும்பும் பெரும்பற்றப் புலியூர்த்
   திருவளர் திருச்சிற்றம் பலமே. 

[5]
நெஞ்சிட ரகல அகம்புகுந் தொடுங்கு
   நிலைமையோ டிருள்கிழித் தெழுந்த
வெஞ்சுடர் சுடர்வ போன்றொளி துளும்பும்
   விரிசடை யடிகள்தங் கோயில்
அஞ்சுடர்ப் புரிசை ஆழிசூழ் வட்டத்
   தகம்படி மணிநிரை பரந்த
செஞ்சுடர் அரும்பும் பெரும்பற்றப் புலியூர்த்
   திருவளர் திருச்சிற்றம் பலமே. 

[6]
பூத்திரள் உருவம் செங்கதிர் விரியாப்
   புந்தியில் வந்தமால் விடையோன்
தூத்திரட் பளிங்கிற் றோன்றிய தோற்றந்
   தோன்றநின் றவன்வளர் கோயில்
நாத்திரள் மறையோர்ந் தோமகுண் டத்து
   நறுநெயால் மறையவர் வளர்த்த
தீத்திரள் அரும்பு பெரும்பற்றப் புலியூர்த்
   திருவளர் திருச்சிற்றம் பலமே. 

[7]
சீர்த்ததிண் புவனம் முழுவதும் ஏனைத்
   திசைகளோ டண்டங்க ளனைத்தும்
போர்த்ததம் பெருமை சிறுமைபுக் கொடுங்கும்
   புணர்ப்புடை அடிகள்தங் கோயில்
ஆர்த்துவந் தமரித் தமரரும் பிறரும்
   அலைகடல் இடுதிரைப் புனிதத்
தீர்த்தநீர் அரும்பும் பெரும்பற்றப் புலியூர்த்
   திருவளர் திருச்சிற்றம் பலமே.

[8]
பின்னுசெஞ் சடையும் பிறைதவழ் மொழுப்பும்
   பெரியதங் கருணையுங் காட்டி
அன்னைதேன் கலந்தின் னமுதுகந் தளித்தாங்
   கருள்புரி பரமர்தங் கோயில்
புன்னைதேன் சொரியும் பொழிலகங் குடைந்து
   பொறிவரி வண்டினம் பாடும்
தென்னதேன் அரும்பும் பெரும்பற்றப் புலியூர்த்
   திருவளர் திருச்சிற்றம் பலமே.

[9]
உம்பர்நா டிம்பர் விளங்கியாங் கெங்கும்
   ஒளிவளர் திருமணிச் சுடர்கான்
றெம்பிரான் நடஞ்செய் சூழலங் கெல்லாம்
   இருட்பிழம் பறஎறி கோயில்
வம்புலாங் கோயில் கோபுரம் கூடம்
   வளர்நிலை மாடமா ளிகைகள்
செம்பொனால் அரும்பும் பெரும்பற்றப் புலியூர்த்
   திருவளர் திருச்சிற்றம் பலமே. 

[10]
இருந்திரைத் தரளப் பரவைசூ ழகலத்
   தெண்ணிலங் கண்ணில்புன் மாக்கள்
திருந்துயிர்ப் பருவத் தறிவுறு கருவூர்த்
   துறைவளர் தீந்தமிழ் மாலை
பொருந்தருங் கருணைப் பரமர்தங் கோயில்
   பொழிலகங் குடைந்துவண் டுறங்கச்
செருந்திநின் றரும்பும் பெரும்பற்றப் புலியூர்த்
   திருவளர் திருச்சிற்றம் பலமே. 

[11]

Back to Top
கருவூர்த் தேவர்   திருவிசைப்பா  
9.009   கருவூர்த் தேவர் - திருக்களந்தை ஆதித்தேச்சரம்  
பண் -   (திருத்தலம் திருக்களந்தை ஆதித்தேச்சரம் ; அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
கலைகடம் பொருளும் அறிவுமாய் என்னைக்
   கற்பினிற் பெற்றெடுத் தெனக்கே
முலைகடந் தருளுந் தாயினும் நல்ல
   முக்கணான் உறைவிடம் போலும்
மலைகுடைந் தனைய நெடுநிலை மாட
   மருங்கெலாம் மறையவர் முறையோத்
தலைகடல் முழங்கும் அந்தண்நீர்க் களந்தை
   அணிதிகழ் ஆதித்தேச் சரமே.

[1]
சந்தன களபம் துதைந்தநன் மேனித்
   தவளவெண் பொடிமுழு தாடும்
செந்தழ லுருவிற் பொலிந்துநோக் குடைய
   திருநுத லவர்க்கிடம் போலும்
இந்தன விலங்கல் எறிபுனந் தீப்பட்
   டெரிவதொத் தெழுநிலை மாடம்
அந்தணர் அழலோம் பலைபுனற் களந்தை
   அணிதிகழ் ஆதித்தேச் சரமே. 

[2]
கரியரே இடந்தான் செய்யரே யொருபால்
   கழுத்தில்ஓர் தனிவடம் சேர்த்தி
முரிவரே முனிவர் தம்மொடால் நிழற்கீழ்
   முறைதெரிந் தோருடம் பினராம்
இருவரே முக்கண் நாற்பெருந் தடந்தோள்
   இறைவரே மறைகளுந் தேட
அரியரே ஆகில் அவரிடம் களந்தை
   அணிதிகழ் ஆதித்தேச் சரமே. 

[3]
பழையராந் தொண்டர்க் கெளியரே மிண்டர்க்
   கரியரே பாவியேன் செய்யும்
பிழையெலாம் பொறுத்தென் பிணிபொறுத் தருளாப்
   பிச்சரே நச்சரா மிளிருங்
குழையராய் வந்தென் குடிமுழு தாளுங்
   குழகரே ஒழுகுநீர்க் கங்கை
அழகரே ஆகில் அவரிடம் களந்தை
   அணிதிகழ் ஆதித்தேச் சரமே.

[4]
பவளமே மகுடம் பவளமே திருவாய்
   பவளமே திருவுடம் பதனில்
தவளமே களபம் தவளமே புரிநூல்
   தவளமே முறுவல்ஆ டரவந்
துவளுமே கலையும் துகிலுமே யொருபால்
   துடியிடை இடமருங் கொருத்தி
அவளுமே ஆகில் அவரிடங் களந்தை
   அணிதிகழ் ஆதித்தேச் சரமே.

[5]
நீலமே கண்டம் பவளமே திருவாய்
   நித்திலம் நிரைத்திலங் கினவே
போலுமே முறுவல் நிறையஆ னந்தம்
   பொழியுமே திருமுகம் ஒருவர்
கோலமே அச்சோ அழகிதே யென்று
   குழைவரே கண்டவர் உண்ட
தாலமே ஆகில் அவரிடம் களந்தை
   அணிதிகழ் ஆதித்தேச் சரமே. 

[6]
திக்கடா நினைந்து நெஞ்சிடிந் துருகுந்
   திறத்தவர் புறத்திருந் தலச
மைக்கடா அனைய என்னையாள் விரும்பி
   மற்றொரு பிறவியிற் பிறந்து
பொய்க்கடா வண்ணங் காத்தெனக் கருளே
   புரியவும் வல்லரே எல்லே
அக்கடா வாகில் அவரிடம் களந்தை
   அணிதிகழ் ஆதித்தேச் சரமே. 

[7]
மெய்யரே மெய்யர்க் கிடுதிரு வான
   விளக்கரே எழுதுகோல் வளையாள்
மையரே வையம் பலிதிரிந் துறையும்
   மயானரே உளங்கலந் திருந்தும்
பொய்யரே பொய்யர்க் கடுத்தவான் பளிங்கின்
   பொருள்வழி இருள்கிழித் தெழுந்த
ஐயரே யாகில் அவரிடம் களந்தை
   அணிதிகழ் ஆதித்தேச் சரமே. 

[8]
குமுதமே திருவாய் குவளையே களமும்
   குழையதே யிருசெவி ஒருபால்
விமலமே கலையும் உடையரே சடைமேல்
   மிளிருமே பொறிவரி நாகம்
கமலமே வதனம் கமலமே நயனம்
   கனகமே திருவடி நிலை நீர்
அமலமே யாகில் அவரிடம் களந்தை
   அணிதிகழ் ஆதித்தேச் சரமே. 

[9]
நீரணங் கசும்பு கழனிசூழ் களந்தை
   நிறைபுகழ் ஆதித்தேச் சரத்து
நாரணன் பரவுந் திருவடி நிலைமேல்
   நலமலி கலைபயில் கருவூர்
ஆரணம் மொழிந்த பவளவாய் சுரந்த
   அமுதம்ஊ றியதமிழ் மாலை
ஏரணங் கிருநான் கிரண்டிவை வல்லோர்
   இருள்கிழித் தெழுந்த சிந்தையரே.

[10]

Back to Top
கருவூர்த் தேவர்   திருவிசைப்பா  
9.010   கருவூர்த் தேவர் - திருக்கீழ்க்கோட்டூர் மணியம்பலம்  
பண் -   (திருத்தலம் திருக்கீழ்க்கோட்டூர் மணியம்பலம் ; அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
தளிரொளி மணிப்பூம் பதம்சிலம் பலம்பச்
   சடைவிரித் தலையெறி கங்கைத்
தெளிரொளி மணிநீர்த் திவலைமுத் தரும்பித்
   திருமுகம் மலர்ந்துசொட் டட்டக்
கிளரொளி மணிவண் டறைபொழிற் பழனங்
   கெழுவுகம் பலைசெய்கீழ்க் கோட்டூர்
வளரொளி மணியம் பலத்துள்நின் றாடும்
   மைந்தன்என் மனங்கலந் தானே. 

[1]
துண்டவெண் பிறையும் படர்சடை மொழுப்பும்
   சுழியமும் சூலமும் நீல
கண்டமும் குழையும் பவளவாய் இதழும்
   கண்ணுதல் திலகமும் காட்டிக்
கெண்டையும் கயலும் உகளும்நீர்ப் பழனங்
   கெழுவுகம் பலைசெய்கீழ்க் கோட்டூர்
வண்டறை மணியம் பலத்துள் நின்றாடும்

   மைந்தன்என் மனங்கலந் தானே.

[2]
திருநுதல் விழியும் பவளவாய் இதழும்
   திலகமும் உடையவன் சடைமேற்
புரிதரு மலரின் தாதுநின் றூதப்
   போய்வருந் தும்பிகாள் இங்கே
கிரிதவழ் முகிலின் கீழ்த்தவழ் மாடங்
   கெழுவுகம் பலைசெய்கீழ்க் கோட்டூர்
வருதிறல் மணியம் பலவனைக் கண்டென்
   மனத்தையும் கொண்டுபோ துமினே. 

[3]
தெள்ளுநீ றவன்நீ றென்னுடல் விரும்பும்
   செவிஅவன் அறிவுநூல் கேட்கும்
மெள்ளவே அவன்பேர் விளம்பும்வாய் கண்கள்
   விமானமே நோக்கிவெவ் வுயிர்க்கும்
கிள்ளைபூம் பொதும்பிற் கொஞ்சிமாம் பொழிற்கே
   கெழுவுகம் பலைசெய்கீழ்க் கோட்டூர்
வள்ளலே மணியம் பலத்துள் நின்றாடும்
   மைந்தனே என்னும்என் மனனே.

[4]
தோழி யாம்செய்த தொழில்என் எம்பெருமான்
   துணைமலர்ச் சேவடி காண்பான்
ஊழிதோ றூழி உணர்ந்துளங் கசிந்து
   நெக்குநைந் துளங்கரைந் துருக்கும்
கேழலும் புள்ளு மாகிநின் றிருவர்
   கெழுவுகம் பலைசெய்கீழ்க் கோட்டூர்
வாழிய மணியம் பலவனைக் காண்பான்
   மயங்கவும் மாலொழி யோமே. 

[5]
என்செய்கோம் தோழி தோழிநீ துணையா
   இரவுபோம் பகல்வரு மாகில்
அஞ்சலோ என்னான் ஆழியும் திரையும்
   அலமரு மாறுகண் டயர்வன்
கிஞ்சுக மணிவாய் அரிவையர் தெருவிற்
   கெழுவுகம் பலைசெய்கீழ்க் கோட்டூர்
மஞ்சணி மணியம் பலவவோ என்று
   மயங்குவன் மாலையம் பொழுதே. 

[6]
தழைதவழ் மொழுப்பும் தவளநீற் றொளியும்
   சங்கமும் சகடையின் முழக்கும்
குழைதவழ் செவியும் குளிர்சடைத் தெண்டும்
   குண்டையும் குழாங்கொடு தோன்றும்
கிழைதவழ் கனகம் பொழியுநீர்ப் பழனங்
   கெழுவுகம் பலைசெய்கீழ்க் கோட்டூர்
மழைதவழ் மணியம் பலத்துள் நின்றாடும்
   மைந்தர்தம் வாழ்வுபோன் றதுவே. 

[7]
தன்னக மழலைச் சிலம்பொடு சதங்கை
   தமருகம் திருவடி திருநீ
றின்னகை மழலை கங்கைகொங் கிதழி
   இளம்பிறை குழைவளர் இளமான்
கின்னரம் முழவம் மழலையாழ் வீணை
   கெழுவுகம் பலைசெய்கீழ்க் கோட்டூர்
மன்னவன் மணியம் பலத்துள் நின்றாடும்
   மைந்தன்என் மனத்துள்வைத் தனனே.

[8]
யாதுநீ நினைவ தெவரையா முடைய
   தெவர்களும் யாவையும் தானாய்ப்
பாதுகை மழலைச் சிலம்பொடு புகுந்தென்
   பனிமலர்க் கண்ணுள்நின் றகலான்
கேதகை நிழலைக் குருகென மருவிக்
   கெண்டைகள் வெருவுகீழ்க் கோட்டூர்
மாதவன் மணியம் பலத்துள் நின்றாடும்
   மைந்தன்என் மனம்புகுந் தானே. 

[9]
அந்திபோல் உருவும் அந்தியிற் பிறைசேர்
   அழகிய சடையும் வெண்ணீறும்
சிந்தையால் நினையிற் சிந்தையுங் காணேன்
   செய்வதென் தெளிபுனல் அலங்கற்
கெந்தியா உகளுங் கெண்டைபுண் டரீகங்
   கிழிக்குந்தண் பணைசெய்கீழ்க் கோட்டூர்
வந்தநாள் மணியம் பலத்துள் நின்றாடும்
   மைந்தனே அறியும்என் மனமே. 

[10]
கித்திநின் றாடும் அரிவையர் தெருவிற்
   கெழுவுகம் பலைசெய்கீழ்க் கோட்டூர்
மத்தனை மணியம் பலத்துள் நின்றாடும்
   மைந்தனை ஆரணம் பிதற்றும்
பித்தனேன் மொழிந்த மணிநெடு மாலை
   பெரியவர்க் ககலிரு விசும்பின்
முத்தியா மென்றே உலகர்ஏத் துவரேல்
   முகமலர்ந் தெதிர்கொளுந் திருவே. 

[11]

Back to Top
கருவூர்த் தேவர்   திருவிசைப்பா  
9.011   கருவூர்த் தேவர் - திருமுகத்தலை  
பண் -   (திருத்தலம் திருமுகத்தலை ; அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
புவனநா யகனே அகவுயிர்க் கமுதே
   பூரணா ஆரணம் பொழியும்
பவளவாய் மணியே பணிசெய்வார்க் கிரங்கும்
   பசுபதீ பன்னகா பரணா
அவனிஞா யிறுபோன் றருள்புரிந் தடியேன்
   அகத்திலும் முகத்தலை மூதூர்த்
தவளமா மணிப்பூங் கோயிலும் அமர்ந்தாய்
   தனியனேன் தனிமைநீங் குதற்கே. 

[1]
புழுங்குதீ வினையேன் வினைகெடப் புகுந்து
   புணர்பொரு ளுணர்வுநூல் வகையால்
வழங்குதேன் பொழியும் பவளவாய் முக்கண்
   வளரொளி மணிநெடுங் குன்றே
முழங்குதீம் புனல்பாய்ந் திளவரால் உகளும்
   முகத்தலை யகத்தமர்ந் தடியேன்
விழுங்குதீங் கனியாய் இனியஆ னந்த
   வெள்ளமாய் உள்ளமா யினையே. 

[2]
கன்னகா உள்ளக் கள்வனேன் நின்கண்
   கசிவிலேன் கண்ணின்நீர் சொரியேன்
முன்னகா வொழியேன் ஆயினும் செழுநீர்
   முகத்தலை யகத்தமர்ந் துறையும்
பன்னகா பரணா பவளவாய் மணியே
   பாவியேன் ஆவியுள் புகுந்த
தென்னகா ரணம்நீ ஏழைநா யடியேற்
   கெளிமையோ பெருமையா வதுவே. 

[3]
கேடிலா மெய்ந்நூல் கெழுமியுஞ் செழுநீர்க்
   கிடையனா ருடையஎன் னெஞ்சிற்
பாடிலா மணியே மணியுமிழ்ந் தொளிரும்
   பரமனே பன்னகா பரணா
மேடெலாஞ் செந்நெற் பசுங்கதிர் விளைந்து
   மிகத்திகழ் முகத்தலை மூதூர்
நீடினா யெனினும் உள்புகுந் தடியேன்
   நெஞ்செலாம் நிறைந்துநின் றாயே.

[4]
அக்கனா அனைய செல்வமே சிந்தித்
   தைவரோ டென்னொடும் விளைந்த
இக்கலாம் முழுதும் ஒழியவந் துள்புக்
   கென்னையாள் ஆண்ட நாயகனே
முக்கணா யகனே முழுதுல கிறைஞ்ச
   முகத்தலை யகத்தமர்ந் தடியேன்
பக்கலா னந்தம் இடையறா வண்ணம்
   பண்ணினாய் பவளவாய் மொழிந்தே. 

[5]
புனல்பட உருகி மண்டழல் வெதும்பிப்
   பூம்புனல் பொதிந்துயிர் அளிக்கும்
வினைபடு நிறைபோல் நிறைந்தவே தகத்தென்
   மனம்நெக மகிழ்ந்தபே ரொளியே
முனைபடு மதில்மூன் றெரித்த நாயகனே
   முகத்தலை யகத்தமர்ந் தடியேன்
வினைபடும் உடல்நீ புகுந்துநின் றமையால்
   விழுமிய விமானமா யினதே.

[6]
விரியும்நீ ராலக் கருமையின் சாந்தின்
   வெண்மையும் செந்நிறத் தொளியும்
கரியும்நீ றாடுங் கனலும்ஒத் தொளிருங்
   கழுத்தில்ஓர் தனிவடங் கட்டி
முரியுமா றெல்லாம் முரிந்தழ கியையாய்
   முகத்தலை யகத்தமர்ந் தாயைப்
பிரியுமா றுளதே பேய்களோம் செய்த
   பிழைபொறுத் தாண்டபே ரொளியே. 

[7]
என்னைஉன் பாத பங்கயம் பணிவித்
   தென்பெலாம் உருகநீ எளிவந்
துன்னைஎன் பால்வைத் தெங்கும்எஞ் ஞான்றும்
   ஒழிவற நிறைந்தஒண் சுடரே
முன்னைஎன் பாசம் முழுவதும் அகல
   முகத்தலை யகத்தமர்ந் தெனக்கே
கன்னலும் பாலும் தேனும்ஆ ரமுதும்
   கனியுமாய் இனியைஆ யினையே. 

[8]
அம்பரா அனலா அனிலமே புவிநீ
   அம்புவே இந்துவே இரவி
உம்பரால் ஒன்றும் அறிவொணா அணுவாய்
   ஒழிவற நிறைந்தஒண் சுடரே
மொய்ம்பராய் நலஞ்சொல் மூதறி வாளர்
   முகத்தலை யகத்தமர்ந் தெனக்கே
எம்பிரா னாகி ஆண்டநீ மீண்டே
   எந்தையும் தாயும்ஆ யினையே. 

[9]
மூலமாய் முடிவாய் முடிவிலா முதலாய்
   முகத்தலை யகத்தமர்ந் தினிய
பாலுமாய் அமுதாம் பன்னகா பரணன்
   பனிமலர்த் திருவடி யிணைமேல்
ஆலைஅம் பாகின் அனையசொற் கருவூர்
   அமுதுறழ் தீந்தமிழ் மாலை
சீலமாப் பாடும் அடியவர் எல்லாம்
   சிவபதம் குறுகிநின் றாரே. 

[10]

Back to Top
கருவூர்த் தேவர்   திருவிசைப்பா  
9.012   கருவூர்த் தேவர் - திரைலோக்கிய சுந்தரம்  
பண் -   (திருத்தலம் பொது -திரைலோக்கிய சுந்தரம் ; அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
நீரோங்கி வளர்கமலம்
   நீர்பொருந்தாத் தன்மையன்றே
ஆரோங்கிமுகம் மலர்ந்தாங்
   கருவினையேன் திறம்மறந்தின்
றூரோங்கும் பழிபாரா
   துன்பாலே விழுந்தொழிந்தேன்
சீரோங்கும் பொழிற்கோடைத்
   திரைலோக்கிய சுந்தரனே. 

[1]
நையாத மனத்தினனை
   நைவிப்பான் இத்தெருவே
ஐயாநீ உலாப்போந்த
   அன்றுமுதல் இன்றுவரை
கையாரத் தொழுதருவி
   கண்ணாரச் சொரிந்தாலும்
செய்யாயோ அருள் கோடைத்
   திரைலோக்கிய சுந்தரனே.

[2]
அம்பளிங்கு பகலோன்பால்
   அடைபற்றாய் இவள்மனத்தின்
முன்பளிந்த காதலும்நின்
   முகந்தோன்ற விளங்கிற்றால்
வம்பளிந்த கனியேஎன்
   மருந்தேநல் வளர்முக்கட்
செம்பளிங்கே பொழிற்கோடைத்
   திரைலோக்கிய சுந்தரனே.

[3]
மைஞ்ஞின்ற குழலாள்தன்
   மனம்தரவும் வளைதாரா
திஞ்ஞின்ற கோவணவன்
   இவன்செய்த தியார்செய்தார்
மெய்ஞ்ஞின்ற தமர்க்கெல்லாம்
   மெய்ஞ்ஞிற்கும் பண்பினுறு
செய்ஞ்ஞன்றி யிலன்கோடைத்
   திரைலோக்கிய சுந்தரனே. 

[4]
நீவாரா தொழிந்தாலும்
   நின்பாலே விழுந்தேழை
கோவாத மணிமுத்தும்
   குவளைமலர் சொரிந்தனவால்
ஆவாஎன் றருள்புரியாய்
   அமரர்கணம் தொழுதேத்தும்
தேவாதென் பொழிற்கோடைத்
   திரைலோக்கிய சுந்தரனே. 

[5]
முழுவதும்நீ யாயினும்இம்
   மொய்குழலாள் மெய்ம்முழுதும்
பழுதெனவே நினைந்தோராள்
   பயில்வதும்நின் னொருநாமம்
அழுவதும்நின் திறம்நினைந்தே
   அதுவன்றோ பெறும்பேறு
செழுமதில்சூழ் பொழிற்கோடைத்
   திரைலோக்கிய சுந்தரனே. 

[6]
தன்சோதி எழுமேனித்
   தபனியப்பூச் சாய்க்காட்டாய்
உன்சோதி எழில்காண்பான்
   ஓலிடவும் உருக்காட்டாய்
துஞ்சாக்கண் ணிவளுடைய
   துயர்தீரும் ஆறுரையாய்
செஞ்சாலி வயற்கோடைத்
   திரைலோக்கிய சுந்தரனே. 

[7]
அரும்பேதைக் கருள்புரியா
   தொழிந்தாய்நின் அவிர்சடைமேல்
நிரம்பாத பிறைதூவும்
   நெருப்பொடுநின் கையிலியாழ்
நரம்பாலும் உயிரீர்ந்தாய்
   நளிர்புரிசைக் குளிர்வனம்பா
திரம்போது சொரிகோடைத்
   திரைலோக்கிய சுந்தரனே.

[8]
ஆறாத பேரன்பி
   னவர்உள்ளம் குடிகொண்டு
வேறாகப் பலர்சூழ
   வீற்றிருத்தி அதுகொண்டு
வீறாடி இவள்உன்னைப்
   பொதுநீப்பான் விரைந்தின்னம்
தேறாள்தென் பொழிற்கோடைத்
   திரைலோக்கிய சுந்தரனே. 

[9]
சரிந்ததுகில் தளர்ந்தஇடை
   அவிழ்ந்தகுழல் இளந்தெரிவை
இருந்தபரி சொருநாள்கண்
   டிரங்காய்எம் பெருமானே
முரிந்தநடை மடந்தையர்தம்
   முழங்கொலியும் வழங்கொலியும்
திருந்துவிழ வணிகோடைத்
   திரைலோக்கிய சுந்தரனே.

[10]
ஆரணத்தேன் பருகிஅருந்
   தமிழ்மாலை கமழவரும்
காரணத்தின் நிலைபெற்ற
   கருவூரன் தமிழ்மாலை
பூரணத்தார் ஈரைந்தும்
   போற்றிசைப்பார் காந்தாரம்
சீரணைத்த பொழிற்கோடைத்
   திரைலோக்கிய சுந்தரனே. 

[11]

Back to Top
கருவூர்த் தேவர்   திருவிசைப்பா  
9.013   கருவூர்த் தேவர் - கங்கைகொண்ட சோளேச்சரம்  
பண் -   (திருத்தலம் கங்கைகொண்ட சோழீசுவரர் ; அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
அ ன்னமாய் விசும்பு பறந்தயன் தேட
அங்ஙனே பெரியநீ சிறிய
என்னையாள் விரும்பி என்மனம் புகுந்த
எளிமையை என்றும்நான் மறக்கேன்
முன்னம்மால் அறியா ஒருவனாம் இருவா
முக்கணா நாற்பெருந் தடந்தோள்
கன்னலே தேனே அமுதமே கங்கை
கொண்டசோ ளேச்சரத் தானே.

[1]
உண்ணெகிழ்ந்(து) உடலம் நெக்குமுக் கண்ணா !
ஓலமென்(று) ஓலமிட்(டு) ஒருநாள்
மண்ணினின்று அலறேன் வழிமொழி மாலை
மழலையஞ் சிலம்படி முடிமேல்
பண்ணிநின்(று) உருகேன் பணிசெயேன் எனினும்
பாவியேன் ஆவியுள் புகுந்தென்
கண்ணினின்று அகலான் என்கொலோ கங்கை
கொண்டசோ ளேச்சரத் தானே.

[2]
அற்புதத்தெய்வம் இதனின்மற் றுண்டே
அன்பொடு தன்னைஅஞ் செழுத்தின்
சொற்பதத் துள்வைத்(து) உள்ளம்அள் ளூறும்
தொண்டருக்(கு) எண்டிசைக் கனகம்
பற்பதக் குவையும் பைம்பொன்மா ளிகையும்
பவளவா யவர்பணை முலையும்
கற்பகப் பொழிலும் முழுதுமாம் கங்கை
கொண்டசோ ளேச்சரத் தானே.

[3]
ஐயபொட் டிட்ட அழகுவாள் நுதலும்
அழகிய விழியும்வெண்ணீறும்
சைவம்விட் டிட்ட சடைகளும் சடைமேல்
தரங்கமும் சதங்கையும் சிலம்பும்
மொய்கொள்எண் திக்கும் கண்டநின் தொண்டர்
முகமலர்ந்து இருகணீர் அரும்பக்
கைகள்மொட் டிக்கும் என்கொலோ கங்கை
கொண்டசோ ளேச்சரத் தானே !

[4]
கருதிவா னவனாம் திருநெடு மாலாம்
சுந்தர விசும்பின்இந் திரனாம்
பருதிவா னவனாம் படர்சடை முக்கண்
பகவனாம் அகஉயிர்க்கு அமுதாம்
எருதுவா கனனாம் எயில்கள் மூன்(று) எரித்த
ஏறுசே வகனுமாம் பின்னும்
கருதுவார் கருதும் உருவமாம் கங்கை
கொண்டசோ ளேச்சரத் தானே.

[5]
அண்டமோர் அணுவாம் பெருமைகொண்(டு) அணுவோர்
அண்டமாம் சிறுமைகொண்(டு) அடியேன்
உண்டவூண் உனக்காம் வகைஎன துள்ளம்
உள்கலந்(து) ஏழுபரஞ் சோதி
கொண்டநாண் பாம்பாம் பெருவரை வில்லில்
குறுகலர் புரங்கள் மூன்(று) எரித்த
கண்டனே ! நீல கண்டனே ! கங்கை
கொண்டசோ ளேச்சரத் தானே!

[6]
மோதலைப் பட்ட கடல்வயி(று) உதித்த
முழுமணித் திரள்அமு(து) ஆங்கே
தாய்தலைப் பட்டங்(கு) உருகிஒன் றாய
தன்மையில் என்னைமுன் ஈன்ற
நீதலைப் பட்டால் யானும் அவ்வகையே
நிசிசரர் இருவரோடு ஒருவர்
காதலிற் பட்ட கருணையாய் கங்கை
கொண்டசோ ளேச்சரத் தானே.

[7]
தத்தையங் கனையார் தங்கள்மேல் வைத்த
தயாவைநூ றாயிரங் கூறிட்(டு)
அத்திலங்(கு) ஒருகூ(று) உன்கண்வைத் தவருக்(கு)
அமருல(கு) அளிக்கும்நின் பெருமை
பித்தனென்(று) ஒருகால் பேசுவ ரேனும்
பிழைத்தவை பொறுத்தருள் செய்யும்
கைத்தலம் அடியேன் சென்னிமேல்வைத்த கங்கை
கொண்டசோ ளேச்சரத் தானே.

[8]
பண்ணிய தழல்காய் பாலளா நீர்போல்
பாவமுன் பறைந்துபா லனைய
புண்ணியம் பின்சென்(று) அறிவினுக்(கு) அறியப்
புகுந்ததோர் யோகினில் பொலிந்து
நுண்ணியை எனினும் நம்பநின் பெருமை
நுன்னிடை ஒடுங்கநீ வந்தென்
கண்ணினுள் மணியிற் கலந்தனை கங்கை
கொண்டசோ ளேச்சரத் தானே.

[9]
அங்கைகொண்(டு) அமரர் மலர்மழை பொழிய
அடிச்சிலம்பு அலம்பவந்(து) ஒருநாள்
உங்கைகொண் டடியேன் சென்னிவைத் தென்னை
உய்யக்கொண் டருளினை மருங்கில்
கொங்கைகொண்(டு) அனுங்கும் கொடியிடை காணில்
கொடியள்என்(று) அவிர்சடை முடிமேல்
கங்கைகொண் டிருந்த கடவுளே ! கங்கை
கொண்டசோ ளேச்சரத் தானே.

[10]
மங்கையோ டிருந்தே யோகுசெய் வானை
வளர்இளந் திங்களை முடிமேல்
கங்கையோ(டு) அணியும் கடவுளைக் கங்கை
கொண்டசோ ளேச்சரத் தானை
அங்கையோ டேந்திப் பலிதிரி கருவூர்
அறைந்தசொல் மாலையால் ஆழிச்
செங்கையோ(டு) உலகில் அரசுவீற் றிருந்து
திளைப்பதும் சிவனருட் கடலே. .
[11]

Back to Top
கருவூர்த் தேவர்   திருவிசைப்பா  
9.014   கருவூர்த் தேவர் - திருப்பூவணம்  
பண் -   (திருத்தலம் திருப்பூவணம் ; அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
திருவருள் புரிந்தாள் ஆண்டுகொண் டிங்ஙன்
   சிறியனுக் கினியது காட்டிப்
பெரிதருள் புரிந்தா னந்தமே தரும்நின்
   பெருமையிற் பெரியதொன் றுளதே
மருதர சிருங்கோங் ககில்மரம் சாடி
   வரைவளங் கவர்ந்திழி வையைப்
பொருதிரை மருங்கோங் காவண வீதிப்
   பூவணம் கோயில்கொண் டாயே. 

[1]
பாம்பணைத் துயின்றோன் அயன்முதல் தேவர்
   பன்னெடுங் காலம்நிற் காண்பான்
ஏம்பலித் திருக்க என்னுளம் புகுந்த
   எளிமையை என்றும்நான் மறக்கேன்
தேம்புனற் பொய்கை வாளைவாய் மடுப்பத்
   தெளிதரு தேறல்பாய்ந் தொழுகும்
பூம்பணைச்சோலை ஆவண வீதிப்
   பூவணம் கோயில்கொண் டாயே. 

[2]
கரைகடல் ஒலியின் தமருகத் தரையிற்
   கையினிற் கட்டிய கயிற்றால்
இருதலை ஒருநா இயங்கவந் தொருநாள்
   இருந்திடாய் எங்கள்கண் முகப்பே
விரிதிகழ் விழவின் பின்செல்வோர் பாடல்
   வேட்கையின் வீழ்ந்தபோ தவிழ்ந்த
புரிசடை துகுக்கும் ஆவண வீதிப்
   பூவணம் கோயில்கொண் டாயே.

[3]
கண்ணியல் மணியின் சூழல்புக் கங்கே
   கலந்துபுக் கொடுங்கினேற் கங்ஙன்
நுண்ணியை யெனினும் நம்ப நின் பெருமை
   நுண்ணிமை யிறந்தமை அறிவன்
மண்ணியல் மரபின் தங்கிருள் மொழுப்பின்
   வண்டினம் பாடநின் றாடும்
புண்ணிய மகளிர் ஆவண வீதிப்
   பூவணம் கோயில்கொண் டாயே.

[4]
கடுவினைப் பாசக் கடல்கடந் தைவர்
   கள்ளரை மெள்ளவே துரந்துன்
அடியிணை இரண்டும் அடையுமா றடைந்தேன்
   அருள்செய்வாய் அருள்செயா தொழிவாய்
நெடுநிலை மாடத் திரவிருள் கிழிக்க
   நிலைவிளக் கலகில்சா லேகப்
புடைகிடந் திலங்கும் ஆவண வீதிப்
   பூவணம் கோயில்கொண் டாயே. 

[5]
செம்மனக் கிழவோர் அன்பு தாஎன்றுன்
   சேவடி பார்த்திருந் தலச
எம்மனம் குடிகொண் டிருப்பதற் கியான்ஆர்
   என்னுடை அடிமைதான் யாதே
அம்மனங் குளிர்நாட் பலிக்கெழுந் தருள
   அரிவையர் அவிழ்குழற் சுரும்பு
பொம்மென முரலும் ஆவண வீதிப்
   பூவணம் கோயில்கொண் டாயே. 

[6]
சொன்னவில் முறைநான் காரணம் உணராச்
   சூழல்புக் கொளித்தநீ யின்று
கன்னவில் மனத்தென் கண்வலைப் படும்இக்
   கருணையிற் பெரியதொன் றுளதே
மின்னவில் கனக மாளிகை வாய்தல்
   விளங்கிளம் பிறைதவழ் மாடம்
பொன்னவில் புரிசை ஆவண வீதிப்
   பூவணம் கோயில்கொண் டாயே.

[7]
இப்பாடல் கிடைக்கவில்லை.

[8]
இப்பாடல் கிடைக்கவில்லை.

[9]
பூவணம் கோயில் கொண்டெனை ஆண்ட
   புனிதனை வனிதை பாகனை வெண்
கோவணங் கொண்டு வெண்டலை ஏந்தும்
   குழகனை அழகெலாம் நிறைந்த
தீவணன் றன்னைச் செழுமறை தெரியுந்
   திகழ்கரு வூரனேன் உரைத்த
பாவணத் தமிழ்கள் பத்தும்வல் லார்கள்
   பரமன துருவமா குவரே. 

[10]

Back to Top
கருவூர்த் தேவர்   திருவிசைப்பா  
9.015   கருவூர்த் தேவர் - திருச்சாட்டியக்குடி  
பண் -   (திருத்தலம் திருச்சாட்டியக்குடி ; அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
பெரியவா கருணை இளநிலா வெறிக்கும்
   பிறைதவழ் சடைமொழுப் பவிழ்ந்து
சரியுமா சுழியம் குழைமிளிர்ந் திருபால்
   தாழ்ந்தவா காதுகள் கண்டம்
கரியவா தாமும் செய்யவாய் முறுவல்
   காட்டுமா சாட்டியக் குடியார்
இருகைகூம் பினகண் டலர்ந்தவா முகம்ஏழ்
   இருக்கையில் இருந்தஈ சனுக்கே. 

[1]
பாந்தள்பூ ணாரம் பரிகலங் கபாலம்
   பட்டவர்த் தனம்எரு தன்பர்
வார்ந்தகண் ணருவி மஞ்சன சாலை
   மலைமகள் மகிழ்பெருந் தேவி
சாந்தமும் திருநீ றருமறை கீதம்
   சடைமுடி சாட்டியக் குடியார்
ஏந்தெழில் இதயங் கோயில் மா ளிகைஏழ்
   இருக்கையுள் இருந்தஈ சனுக்கே. 

[2]
தொழுதுபின் செல்வ தயன்முதற் கூட்டம்
   தொடர்வன மறைகள்நான் கெனினும்
கழுதுறு கரிகா டுறைவிடம் போர்வை
   கவந்திகை கரியுரி திரிந்தூண்
தழலுமிழ் அரவம் கோவணம் பளிங்கு
   சபவடம் சாட்டியக் குடியார்
இழுதுநெய் சொரிந்தோம் பழல்ஒளி விளக்கேழ்
   இருக்கையில் இருந்தஈ சனுக்கே. 

[3]
பதிகம்நான் மறைதும் புருவும்நா ரதரும்
   பரிவொடு பாடுகாந் தர்ப்பர்
கதியெலாம் அரங்கம் பிணையல்மூ வுலகில்
   கடியிருள் திருநடம் புரியும்
சதியிலார் கலியில் ஒலிசெயும் கையில்
   தமருகம் சாட்டியக் குடியார்
இதயமாம் கமலம் கமலவர்த் தனைஏழ்
   இருக்கையில் இருந்தஈ சனுக்கே. 

[4]
திருமகன் முருகன் தேவியேல் உமையாள்
   திருமகள் மருமகன் தாயாம்
மருமகன் மதனன் மாமனேல் இமவான்
   மலையுடை யரையர்தம் பாவை
தருமனை வளனாம் சிவபுரன் தோழன்
   தனபதி சாட்டியக் குடியார்
இருமுகம் கழல்மூன் றேழுகைத் தலம்ஏழ்
   இருக்கையில் இருந்தஈ சனுக்கே. 

[5]
அனலமே புனலே அனிலமே புவனி
   அம்பரா அம்பரத் தளிக்கும்
கனகமே வெள்ளிக் குன்றமே என்றன்
   களைகணே களைகண்மற் றில்லாத்
தனியனேன் உள்ளம் கோயில்கொண் டருளும்
   சைவனே சாட்டியக் குடியார்க்
கினியதீங் கனியாய் ஒழிவற நிறைந்தேழ்
   இருக்கையில் இருந்தவா றியம்பே.

[6]
செம்பொனே பவளக் குன்றமே நின்ற
   திசைமுகன் மால்முதற் கூட்டத்
தன்பரா னவர்கள் பருகும்ஆ ரமுதே
   அத்தனே பித்தனே னுடைய
சம்புவே அணுவே தாணுவே சிவனே
   சங்கரா சாட்டியக் குடியார்க்
கின்பனே எங்கும் ஒழிவற நிறைந்தேழ்
   இருக்கையில் இருந்தவா றியம்பே. 

[7]
செங்கணா போற்றி திசைமுகா போற்றி
   சிவபுர நகருள்வீற் றிருந்த
அங்கணா போற்றி அமரனே போற்றி
   அமரர்கள் தலைவனே போற்றி
தங்கணான் மறைநூல் சகலமுங் கற்றோர்
   சாட்டியக் குடியிருந் தருளும்
எங்கணா யகனே போற்றிஏ ழிருக்கை
   யிறைவனே போற்றியே போற்றி

[8]
சித்தனே அருளாய் செங்கணா அருளாய்
   சிவபுர நகருள்வீற் றிருந்த
அத்தனே அருளாய் அமரனே அருளாய்
   அமரர்கள் அதிபனே அருளாய்
தத்துநீர்ப் படுகர்த் தண்டலைச் சூழல்
   சாட்டியக் குடியுள்ஏ ழிருக்கை
முத்தனே அருளாய் முதல்வனே அருளாய்
   முன்னவா துயர்கெடுத் தெனக்கே.

[9]
தாட்டரும் பழனப் பைம்பொழிற் படுகர்த்
   தண்டலைச் சாட்டியக் குடியார்
ஈட்டிய பொருளாய் இருக்கும்ஏ ழிருக்கை
   இருந்தவன் திருவடி மலர்மேற்
காட்டிய பொருட்கலை பயில்கரு வூரன்
   கழறுசொன் மாலைஈ ரைந்தும்
மாட்டிய சிந்தை மைந்தருக் கன்றே
   வளரொளி விளங்குவா னுலகே. 

[10]

Back to Top
கருவூர்த் தேவர்   திருவிசைப்பா  
9.016   கருவூர்த் தேவர் - தஞ்சை இராசராசேச்சரம்  
பண் -   (திருத்தலம் தஞ்சை இராசராசேச்சரம் ; அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
உலகெலாம் தொழவந் தெழுக திர்ப்பரிதி
   ஒன்றுநூ றாயிர கோடி
அலகெலாம் பொதிந்த திருவுடம் பச்சோ
   அங்ஙனே யழகிதோ அரணம்
பலகுலாம் படைசெய் நெடுநிலை மாடம்
   பருவரை ஞாங்கர்வெண் டிங்கள்
இலைகுலாம் பதணத் திஞ்சிசூழ் தஞ்சை
   இராசரா சேச்சரத் திவர்க்கே.

[1]
நெற்றியிற் கண்ணென் கண்ணினின் றகலா
   நெஞ்சினில் அஞ்சிலம் பலைக்கும்
பொற்றிரு வடிஎன் குடிமுழு தாளப்
   புகுந்தன போந்தன வில்லை
மற்றெனக் குறவென் மறிதிரை வடவாற்
   றிடுபுனல் மதகில்வாழ் முதலை
எற்றுநீர்க் கிடங்கின் இஞ்சிசூழ் தஞ்சை
   இராசரா சேச்சரத் திவர்க்கே. 

[2]
சடைகெழு மகுடம் தண்ணிலா விரிய
   வெண்ணிலா விரிதரு தரளக்
குடைநிழல் விடைமேற் கொண்டுலாப் போதும்
   குறிப்பெனோ கோங்கிண ரனைய
குடைகெழு நிருபர் முடியொடு முடிதேய்ந்
   துக்கசெஞ் சுடர்ப்படு குவையோங்
கிடைகெழு மாடத் திஞ்சிசூழ் தஞ்சை
   இராசரா சேச்சரத் திவர்க்கே.

[3]
வாழிஅம் போதத் தருகுபாய் விடயம்
   வரிசையின் விளங்கலின் அடுத்த
சூழலம் பளிங்கின் பாசல ராதிச்
   சுடர்விடு மண்டலம் பொலியக்
காழகில் கமழு மாளிகை மகளிர்
   கங்குல்வாய் அங்குலி கெழும
யாழொலி சிலம்பும் இஞ்சிசூழ் தஞ்சை
   இராசரா சேச்சரத் திவர்க்கே. 

[4]
எவருமா மறைகள் எவையும்வா னவர்கள்
   ஈட்டமும் தாட்டிருக் கமலத்
தவருமா லவனும் அறிவரும் பெருமை
   அடல்அழல் உமிழ்தழல் பிழம்பர்
உவரிமா கடலின் ஒலிசெய்மா மறுகில்
   உறுகளிற் றரசின தீட்டம்
இவருமால் வரைசெய் இஞ்சிசூழ் தஞ்சை
   இராசரா சேச்சரத் திவர்க்கே. 

[5]
அருளுமா றருளி ஆளுமா றாள
   அடிகள்தம் அழகிய விழியும்
குருளும்வார் காதும் காட்டியான் பெற்ற
   குயிலினை மயல்செய்வ தழகோ
தரளவான் குன்றில் தண்ணிலா ஒளியும்
   தருகுவால் பெருகுவான் தெருவில்
இருளெலாங் கிழியும் இஞ்சிசூழ் தஞ்சை
   இராசரா சேச்சரத் திவர்க்கே. 

[6]
தனிப்பெருந் தாமே முழுதுறப் பிறப்பின்
   தளிர்இறப் பிலையுதிர் வென்றால்
நினைப்பருந் தம்பாற் சேறலின் றேனும்
   நெஞ்சிடிந் துருகுவ தென்னோ
சுனைப்பெருங் கலங்கற் பொய்கையங் கழுநீர்ச்
   சூழல்மா ளிகைசுடர் வீசும்
எனைப்பெரு மணஞ்செய் இஞ்சிசூழ் தஞ்சை
   இராசரா சேச்சரத் திவர்க்கே.

[7]
பன்னெடுங் காலம் பணிசெய்து பழையோர்
   தாம்பலர் ஏம்பலித் திருக்க
என்னெடுங் கோயில் நெஞ்சுவீற் றிருந்த
   எளிமையை யென்றுநான் மறக்கேன்
மின்னெடும் புருவத் திளமயி லனையார்
   விலங்கல்செய் நாடக சாலை
இன்னடம் பயிலும் இஞ்சிசூழ் தஞ்சை
   இராசரா சேச்சரத் திவர்க்கே. 

[8]
மங்குல்சூழ் போதின் ஒழிவற நிறைந்து
   வஞ்சகர் நெஞ்சகத் தொளிப்பார்;
அங்கழற் சுடராம் அவர்க்கிள வேனல்
   அலர்கதி ரனையர் வா ழியரோ
பொங்கெழில் திருநீ றழிபொசி வனப்பிற்
   புனல்துளும் பவிர்சடை மொழுப்பர்
எங்களுக் கினியர் இஞ்சிசூழ் தஞ்சை
   இராசாரா சேச்சரத் திவர்க்கே. 

[9]
தனியர்எத் தனைஓ ராயிர வருமாந்
   தன்மையர் என்வயத் தினராங்
கனியர்அத் தருதீங் கரும்பர்வெண் புரிநூற்
   கட்டியர் அட்டஆ ரமிர்தர்
புனிதர்பொற் கழலர் புரிசடா மகுடர்
   புண்ணியர் பொய்யிலா மெய்யர்க்
கினியரெத் தனையும் இஞ்சிசூழ் தஞ்சை
   இராசரா சேச்சரத் திவர்க்கே. 

[10]
சரளமந் தார சண்பக வகுள
   சந்தன நந்தன வனத்தின்
இருள்விரி மொழுப்பின் இஞ்சிசூழ் தஞ்சை
   இராசரா சேச்சரத் திவரை
அருமருந் தருந்தி அல்லல்தீர் கருவூர்
   அறைந்தசொன் மாலைஈ ரைந்தின்
பொருள்மருந் துடையோர் சிவபத மென்னும்
   பொன்னெடுங் குன்றுடை யோரே. 

[11]

Back to Top
கருவூர்த் தேவர்   திருவிசைப்பா  
9.017   கருவூர்த் தேவர் - திருவிடைமருதூர்  
பண் -   (திருத்தலம் திருவிடைமருதூர் ; அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
வெய்யசெஞ் சோதி மண்டலம் பொலிய
   வீங்கிருள் நடுநல்யா மத்தோர்
பையசெம் பாந்தள் பருமணி யுமிழ்ந்து
   பாவியேன் காதல்செய் காதில்
ஐயசெம் பொன்தோட் டவிர்சடை மொழுப்பின்
   அழிவழ கியதிரு நீற்று
மையசெங் கண்டத் தண்டவா னவர்கோன்
   மருவிடந் திருவிடை மருதே. 

[1]
இந்திர லோக முழுவதும் பணிகேட்
   டிணையடி தொழுதெழத் தாம்போய்
ஐந்தலை நாக மேகலை யரையா
   அகந்தொறும் பலிதிரி யடிகள்
தந்திரி வீணை கீதமுன் பாடச்
   சாதிகின் னரங்கலந் தொலிப்ப
மந்திர கீதம் தீங்குழல் எங்கும்
   மருவிடந் திருவிடை மருதே. 

[2]
பனிபடு மதியம் பயில்கொழுந் தன்ன
   பல்லவம் வல்லியென் றிங்ஙன்
வினைபடு கனகம் போலயா வையுமாய்
   வீங்குல கொழிவற நிறைந்து
துனிபடு கலவி மலைமக ளுடனாய்த்
   தூங்கிருள் நடுநல்யா மத்தென்
மனனிடை யணுகி நுணுகியுள் கலந்தோன்
   மருவிடந் திருவிடை மருதே.

[3]
அணியுமிழ் சோதி மணியினுள் கலந்தாங்
   கடியனே னுள்கலந் தடியேன்
பணிமகிழ்ந் தருளும் அரிவைபா கத்தன்
   படர்சடை விடமிடற் றடிகள்
துணியுமி ழாடை அரையில்ஓர் ஆடை
   சுடர்உமிழ் தரஅத னருகே
மணியுமிழ் நாக மணியுமிழ்ந் திமைப்ப
   மருவிடந் திருவிடை மருதே. 

[4]
பந்தமும் பிரிவும் தெரிபொருட் பனுவற்
   படிவழி சென்றுசென் றேறிச்
சிந்தையுந் தானுங் கலந்ததோர் கலவி
   தெரியினுந் தெரிவுறா வண்ணம்
எந்தையுந் தாயும் யானுமென் றிங்ஙன்
   எண்ணில்பல் லூழிக ளுடனாய்
வந்தணு காது நுணுகியுள் கலந்தோன்
   மருவிடந் திருவிடை மருதே.

[5]
எரிதரு கரிகாட் டிடுபிண நிணமுண்
   டேப்பமிட் டிலங்கெயிற் றழல்வாய்த்
துருகழல் நெடும்பேய்க் கணமெழுந் தாடுந்
   தூங்கிருள் நடுநல்யா மத்தே
அருள்புரி முறுவல் முகிழ்நிலா எறிப்ப
   அந்திபோன் றொளிர்திரு மேனி
வரியர வாட ஆடும்எம் பெருமான்
   மருவிடந் திருவிடை மருதே.

[6]
எழிலையாழ் செய்கைப் பசுங்கலன் விசும்பின்
   இன்துளி படநனைந் துருகி
அழலையாழ் புருவம் புனலொடுங் கிடந்தாங்
   காதனேன் மாதரார் கலவித்
தொழிலை ஆழ்நெஞ்சம் இடர்படா வண்ணம்
   தூங்கிருள் நடுநல்யா மத்தோர்
மழலையாழ் சிலம்ப வந்தகம் புகுந்தோன்
   மருவிடந் திருவிடை மருதே.

[7]
வையவாம் பெற்றம் பெற்றம்ஏ றுடையார்
   மாதவர் காதல்வைத் தென்னை
வெய்யவாஞ் செந்தீப் பட்டஇட் டிகைபோல்
   விழுமியோன் முன்புபின் பென்கோ
நொய்யவா றென்ன வந்துள்வீற் றிருந்த
   நூறுநூ றாயிர கோடி
மையவாங் கண்டத் தண்டவா னவர்கோன்
   மருவிடந் திருவிடை மருதே. 

[8]
கலங்கலம் பொய்கைப் புனல்தெளி விடத்துக்
   கலந்தமண் ணிடைக்கிடந் தாங்கு
நலங்கலந் தடியேன் சிந்தையுட் புகுந்த
   நம்பனே வம்பனே னுடைய
புலங்கலந் தவனே என்றுநின் றுருகிப்
   புலம்புவார் அவம்புகார் அருவி
மலங்கலங் கண்ணிற் கண்மணி யனையான்
   மருவிடந் திருவிடை மருதே. 

[9]
ஒருங்கிரு கண்ணின் எண்ணில்புன் மாக்கள்
   உறங்கிருள் நடுநல்யா மத்தோர்
கருங்கண்நின் றிமைக்குஞ் செழுஞ்சுடர் விளக்கங்
   கலந்தெனக் கலந்துணர் கருவூர்
தருங்கரும் பனைய தீந்தமிழ் மாலை
   தடம்பொழில் மருதயாழ் உதிப்ப
வருங்கருங் கண்டத் தண்டவா னவர்கோன்
   மருவிடந் திருவிடை மருதே. 

[10]

This page was last modified on Thu, 09 May 2024 01:33:06 -0400
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai nool