9.008 கருவூர்த் தேவர் - கோயில் (கோயில் (சிதம்பரம்) ) |
Back to Top
கருவூர்த் தேவர் திருவிசைப்பா
9.008  
கருவூர்த் தேவர் - கோயில்
பண் - (திருத்தலம் கோயில் (சிதம்பரம்) ; அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
கணம்விரி குடுமிச் செம்மணிக் கவைநாக் கறையணற் கட்செவிப் பகுவாய் பணம்விரி துத்திப் பொறிகொள்வெள் ளெயிற்றுப் பாம்பணி பரமர்தங் கோயில் மணம்விரி தருதே மாம்பொழில் மொழுப்பின் மழைதவழ் வளரிளங் கமுகந் திணர்நிரை அரும்பும் பெரும் பற்றப் புலியூர்த் திருவளர் திருச்சிற்றம் பலமே.
| [1] |
இவ்வரும் பிறவிப் பௌவநீர் நீந்தும் ஏழையேற் கென்னுடன் பிறந்த ஐவரும் பகையே யார்துணை யென்றால் அஞ்சலென் றருள் செய்வான் கோயில் கைவரும் பழனம் குழைத்தசெஞ் சாலிக் கடைசியர் களைதரு நீலம் செய்வரம் பரும்பு பெரும்பற்றப் புலியூர்த் திருவளர் திருச்சிற்றம் பலமே.
| [2] |
தாயினே ரிரங்குந் தலைவவோ என்றும் தமியனேன் துணைவவோ என்றும் நாயினேன் இருந்து புலம்பினால் இரங்கி நலம்புரி பரமர்தங் கோயில் வாயினே ரரும்பு மணிமுருக் கலர வளரிளஞ் சோலைமாந் தளிர்செந் தீயினே ரரும்பு பெரும்பற்றப் புலியூர்த் திருவளர் திருச்சிற்றம் பலமே.
| [3] |
துந்துபி குழல்யாழ் மொந்தைவான் இயம்பத் தொடர்ந்திரு டியர்கணம் துதிப்ப நந்திகை முழவம் முகிலென முழங்க நடம்புரி பரமர்தங் கோயில் அந்தியின் மறைநான் காரணம் பொதிந்த அரும்பெறல் மறைப்பொருள் மறையோர் சிந்தையில் அரும்பும் பெரும்பற்றப் புலியூர்த் திருவளர் திருச்சிற்றம் பலமே.
| [4] |
கண்பனி யரும்பக் கைகள் மொட்டித்தென் களைகணே ஓலமென் றோலிட் டென்பெலா முருகும் அன்பர்தங் கூட்டத் தென்னையும் புணர்ப்பவன் கோயில் பண்பல தெளிதேன் பாடிநின் றாடப் பனிமலர்ச் சோலைசூழ் மொழுப்பிற் செண்பகம் அரும்பும் பெரும்பற்றப் புலியூர்த் திருவளர் திருச்சிற்றம் பலமே.
| [5] |
நெஞ்சிட ரகல அகம்புகுந் தொடுங்கு நிலைமையோ டிருள்கிழித் தெழுந்த வெஞ்சுடர் சுடர்வ போன்றொளி துளும்பும் விரிசடை யடிகள்தங் கோயில் அஞ்சுடர்ப் புரிசை ஆழிசூழ் வட்டத் தகம்படி மணிநிரை பரந்த செஞ்சுடர் அரும்பும் பெரும்பற்றப் புலியூர்த் திருவளர் திருச்சிற்றம் பலமே.
| [6] |
பூத்திரள் உருவம் செங்கதிர் விரியாப் புந்தியில் வந்தமால் விடையோன் தூத்திரட் பளிங்கிற் றோன்றிய தோற்றந் தோன்றநின் றவன்வளர் கோயில் நாத்திரள் மறையோர்ந் தோமகுண் டத்து நறுநெயால் மறையவர் வளர்த்த தீத்திரள் அரும்பு பெரும்பற்றப் புலியூர்த் திருவளர் திருச்சிற்றம் பலமே.
| [7] |
சீர்த்ததிண் புவனம் முழுவதும் ஏனைத் திசைகளோ டண்டங்க ளனைத்தும் போர்த்ததம் பெருமை சிறுமைபுக் கொடுங்கும் புணர்ப்புடை அடிகள்தங் கோயில் ஆர்த்துவந் தமரித் தமரரும் பிறரும் அலைகடல் இடுதிரைப் புனிதத் தீர்த்தநீர் அரும்பும் பெரும்பற்றப் புலியூர்த் திருவளர் திருச்சிற்றம் பலமே.
| [8] |
பின்னுசெஞ் சடையும் பிறைதவழ் மொழுப்பும் பெரியதங் கருணையுங் காட்டி அன்னைதேன் கலந்தின் னமுதுகந் தளித்தாங் கருள்புரி பரமர்தங் கோயில் புன்னைதேன் சொரியும் பொழிலகங் குடைந்து பொறிவரி வண்டினம் பாடும் தென்னதேன் அரும்பும் பெரும்பற்றப் புலியூர்த் திருவளர் திருச்சிற்றம் பலமே.
| [9] |
உம்பர்நா டிம்பர் விளங்கியாங் கெங்கும் ஒளிவளர் திருமணிச் சுடர்கான் றெம்பிரான் நடஞ்செய் சூழலங் கெல்லாம் இருட்பிழம் பறஎறி கோயில் வம்புலாங் கோயில் கோபுரம் கூடம் வளர்நிலை மாடமா ளிகைகள் செம்பொனால் அரும்பும் பெரும்பற்றப் புலியூர்த் திருவளர் திருச்சிற்றம் பலமே.
| [10] |
இருந்திரைத் தரளப் பரவைசூ ழகலத் தெண்ணிலங் கண்ணில்புன் மாக்கள் திருந்துயிர்ப் பருவத் தறிவுறு கருவூர்த் துறைவளர் தீந்தமிழ் மாலை பொருந்தருங் கருணைப் பரமர்தங் கோயில் பொழிலகங் குடைந்துவண் டுறங்கச் செருந்திநின் றரும்பும் பெரும்பற்றப் புலியூர்த் திருவளர் திருச்சிற்றம் பலமே.
| [11] |
Back to Top
கருவூர்த் தேவர் திருவிசைப்பா
9.009  
கருவூர்த் தேவர் - திருக்களந்தை ஆதித்தேச்சரம்
பண் - (திருத்தலம் திருக்களந்தை ஆதித்தேச்சரம் ; அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
கலைகடம் பொருளும் அறிவுமாய் என்னைக் கற்பினிற் பெற்றெடுத் தெனக்கே முலைகடந் தருளுந் தாயினும் நல்ல முக்கணான் உறைவிடம் போலும் மலைகுடைந் தனைய நெடுநிலை மாட மருங்கெலாம் மறையவர் முறையோத் தலைகடல் முழங்கும் அந்தண்நீர்க் களந்தை அணிதிகழ் ஆதித்தேச் சரமே.
| [1] |
சந்தன களபம் துதைந்தநன் மேனித் தவளவெண் பொடிமுழு தாடும் செந்தழ லுருவிற் பொலிந்துநோக் குடைய திருநுத லவர்க்கிடம் போலும் இந்தன விலங்கல் எறிபுனந் தீப்பட் டெரிவதொத் தெழுநிலை மாடம் அந்தணர் அழலோம் பலைபுனற் களந்தை அணிதிகழ் ஆதித்தேச் சரமே.
| [2] |
கரியரே இடந்தான் செய்யரே யொருபால் கழுத்தில்ஓர் தனிவடம் சேர்த்தி முரிவரே முனிவர் தம்மொடால் நிழற்கீழ் முறைதெரிந் தோருடம் பினராம் இருவரே முக்கண் நாற்பெருந் தடந்தோள் இறைவரே மறைகளுந் தேட அரியரே ஆகில் அவரிடம் களந்தை அணிதிகழ் ஆதித்தேச் சரமே.
| [3] |
பழையராந் தொண்டர்க் கெளியரே மிண்டர்க் கரியரே பாவியேன் செய்யும் பிழையெலாம் பொறுத்தென் பிணிபொறுத் தருளாப் பிச்சரே நச்சரா மிளிருங் குழையராய் வந்தென் குடிமுழு தாளுங் குழகரே ஒழுகுநீர்க் கங்கை அழகரே ஆகில் அவரிடம் களந்தை அணிதிகழ் ஆதித்தேச் சரமே.
| [4] |
பவளமே மகுடம் பவளமே திருவாய் பவளமே திருவுடம் பதனில் தவளமே களபம் தவளமே புரிநூல் தவளமே முறுவல்ஆ டரவந் துவளுமே கலையும் துகிலுமே யொருபால் துடியிடை இடமருங் கொருத்தி அவளுமே ஆகில் அவரிடங் களந்தை அணிதிகழ் ஆதித்தேச் சரமே.
| [5] |
நீலமே கண்டம் பவளமே திருவாய் நித்திலம் நிரைத்திலங் கினவே போலுமே முறுவல் நிறையஆ னந்தம் பொழியுமே திருமுகம் ஒருவர் கோலமே அச்சோ அழகிதே யென்று குழைவரே கண்டவர் உண்ட தாலமே ஆகில் அவரிடம் களந்தை அணிதிகழ் ஆதித்தேச் சரமே.
| [6] |
திக்கடா நினைந்து நெஞ்சிடிந் துருகுந் திறத்தவர் புறத்திருந் தலச மைக்கடா அனைய என்னையாள் விரும்பி மற்றொரு பிறவியிற் பிறந்து பொய்க்கடா வண்ணங் காத்தெனக் கருளே புரியவும் வல்லரே எல்லே அக்கடா வாகில் அவரிடம் களந்தை அணிதிகழ் ஆதித்தேச் சரமே.
| [7] |
மெய்யரே மெய்யர்க் கிடுதிரு வான விளக்கரே எழுதுகோல் வளையாள் மையரே வையம் பலிதிரிந் துறையும் மயானரே உளங்கலந் திருந்தும் பொய்யரே பொய்யர்க் கடுத்தவான் பளிங்கின் பொருள்வழி இருள்கிழித் தெழுந்த ஐயரே யாகில் அவரிடம் களந்தை அணிதிகழ் ஆதித்தேச் சரமே.
| [8] |
குமுதமே திருவாய் குவளையே களமும் குழையதே யிருசெவி ஒருபால் விமலமே கலையும் உடையரே சடைமேல் மிளிருமே பொறிவரி நாகம் கமலமே வதனம் கமலமே நயனம் கனகமே திருவடி நிலை நீர் அமலமே யாகில் அவரிடம் களந்தை அணிதிகழ் ஆதித்தேச் சரமே.
| [9] |
நீரணங் கசும்பு கழனிசூழ் களந்தை நிறைபுகழ் ஆதித்தேச் சரத்து நாரணன் பரவுந் திருவடி நிலைமேல் நலமலி கலைபயில் கருவூர் ஆரணம் மொழிந்த பவளவாய் சுரந்த அமுதம்ஊ றியதமிழ் மாலை ஏரணங் கிருநான் கிரண்டிவை வல்லோர் இருள்கிழித் தெழுந்த சிந்தையரே.
| [10] |
Back to Top
கருவூர்த் தேவர் திருவிசைப்பா
9.010  
கருவூர்த் தேவர் - திருக்கீழ்க்கோட்டூர் மணியம்பலம்
பண் - (திருத்தலம் திருக்கீழ்க்கோட்டூர் மணியம்பலம் ; அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
தளிரொளி மணிப்பூம் பதம்சிலம் பலம்பச் சடைவிரித் தலையெறி கங்கைத் தெளிரொளி மணிநீர்த் திவலைமுத் தரும்பித் திருமுகம் மலர்ந்துசொட் டட்டக் கிளரொளி மணிவண் டறைபொழிற் பழனங் கெழுவுகம் பலைசெய்கீழ்க் கோட்டூர் வளரொளி மணியம் பலத்துள்நின் றாடும் மைந்தன்என் மனங்கலந் தானே.
| [1] |
துண்டவெண் பிறையும் படர்சடை மொழுப்பும் சுழியமும் சூலமும் நீல கண்டமும் குழையும் பவளவாய் இதழும் கண்ணுதல் திலகமும் காட்டிக் கெண்டையும் கயலும் உகளும்நீர்ப் பழனங் கெழுவுகம் பலைசெய்கீழ்க் கோட்டூர் வண்டறை மணியம் பலத்துள் நின்றாடும்
மைந்தன்என் மனங்கலந் தானே.
| [2] |
திருநுதல் விழியும் பவளவாய் இதழும் திலகமும் உடையவன் சடைமேற் புரிதரு மலரின் தாதுநின் றூதப் போய்வருந் தும்பிகாள் இங்கே கிரிதவழ் முகிலின் கீழ்த்தவழ் மாடங் கெழுவுகம் பலைசெய்கீழ்க் கோட்டூர் வருதிறல் மணியம் பலவனைக் கண்டென் மனத்தையும் கொண்டுபோ துமினே.
| [3] |
தெள்ளுநீ றவன்நீ றென்னுடல் விரும்பும் செவிஅவன் அறிவுநூல் கேட்கும் மெள்ளவே அவன்பேர் விளம்பும்வாய் கண்கள் விமானமே நோக்கிவெவ் வுயிர்க்கும் கிள்ளைபூம் பொதும்பிற் கொஞ்சிமாம் பொழிற்கே கெழுவுகம் பலைசெய்கீழ்க் கோட்டூர் வள்ளலே மணியம் பலத்துள் நின்றாடும் மைந்தனே என்னும்என் மனனே.
| [4] |
தோழி யாம்செய்த தொழில்என் எம்பெருமான் துணைமலர்ச் சேவடி காண்பான் ஊழிதோ றூழி உணர்ந்துளங் கசிந்து நெக்குநைந் துளங்கரைந் துருக்கும் கேழலும் புள்ளு மாகிநின் றிருவர் கெழுவுகம் பலைசெய்கீழ்க் கோட்டூர் வாழிய மணியம் பலவனைக் காண்பான் மயங்கவும் மாலொழி யோமே.
| [5] |
என்செய்கோம் தோழி தோழிநீ துணையா இரவுபோம் பகல்வரு மாகில் அஞ்சலோ என்னான் ஆழியும் திரையும் அலமரு மாறுகண் டயர்வன் கிஞ்சுக மணிவாய் அரிவையர் தெருவிற் கெழுவுகம் பலைசெய்கீழ்க் கோட்டூர் மஞ்சணி மணியம் பலவவோ என்று மயங்குவன் மாலையம் பொழுதே.
| [6] |
தழைதவழ் மொழுப்பும் தவளநீற் றொளியும் சங்கமும் சகடையின் முழக்கும் குழைதவழ் செவியும் குளிர்சடைத் தெண்டும் குண்டையும் குழாங்கொடு தோன்றும் கிழைதவழ் கனகம் பொழியுநீர்ப் பழனங் கெழுவுகம் பலைசெய்கீழ்க் கோட்டூர் மழைதவழ் மணியம் பலத்துள் நின்றாடும் மைந்தர்தம் வாழ்வுபோன் றதுவே.
| [7] |
தன்னக மழலைச் சிலம்பொடு சதங்கை தமருகம் திருவடி திருநீ றின்னகை மழலை கங்கைகொங் கிதழி இளம்பிறை குழைவளர் இளமான் கின்னரம் முழவம் மழலையாழ் வீணை கெழுவுகம் பலைசெய்கீழ்க் கோட்டூர் மன்னவன் மணியம் பலத்துள் நின்றாடும் மைந்தன்என் மனத்துள்வைத் தனனே.
| [8] |
யாதுநீ நினைவ தெவரையா முடைய தெவர்களும் யாவையும் தானாய்ப் பாதுகை மழலைச் சிலம்பொடு புகுந்தென் பனிமலர்க் கண்ணுள்நின் றகலான் கேதகை நிழலைக் குருகென மருவிக் கெண்டைகள் வெருவுகீழ்க் கோட்டூர் மாதவன் மணியம் பலத்துள் நின்றாடும் மைந்தன்என் மனம்புகுந் தானே.
| [9] |
அந்திபோல் உருவும் அந்தியிற் பிறைசேர் அழகிய சடையும் வெண்ணீறும் சிந்தையால் நினையிற் சிந்தையுங் காணேன் செய்வதென் தெளிபுனல் அலங்கற் கெந்தியா உகளுங் கெண்டைபுண் டரீகங் கிழிக்குந்தண் பணைசெய்கீழ்க் கோட்டூர் வந்தநாள் மணியம் பலத்துள் நின்றாடும் மைந்தனே அறியும்என் மனமே.
| [10] |
கித்திநின் றாடும் அரிவையர் தெருவிற் கெழுவுகம் பலைசெய்கீழ்க் கோட்டூர் மத்தனை மணியம் பலத்துள் நின்றாடும் மைந்தனை ஆரணம் பிதற்றும் பித்தனேன் மொழிந்த மணிநெடு மாலை பெரியவர்க் ககலிரு விசும்பின் முத்தியா மென்றே உலகர்ஏத் துவரேல் முகமலர்ந் தெதிர்கொளுந் திருவே.
| [11] |
Back to Top
கருவூர்த் தேவர் திருவிசைப்பா
9.011  
கருவூர்த் தேவர் - திருமுகத்தலை
பண் - (திருத்தலம் திருமுகத்தலை ; அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
புவனநா யகனே அகவுயிர்க் கமுதே பூரணா ஆரணம் பொழியும் பவளவாய் மணியே பணிசெய்வார்க் கிரங்கும் பசுபதீ பன்னகா பரணா அவனிஞா யிறுபோன் றருள்புரிந் தடியேன் அகத்திலும் முகத்தலை மூதூர்த் தவளமா மணிப்பூங் கோயிலும் அமர்ந்தாய் தனியனேன் தனிமைநீங் குதற்கே.
| [1] |
புழுங்குதீ வினையேன் வினைகெடப் புகுந்து புணர்பொரு ளுணர்வுநூல் வகையால் வழங்குதேன் பொழியும் பவளவாய் முக்கண் வளரொளி மணிநெடுங் குன்றே முழங்குதீம் புனல்பாய்ந் திளவரால் உகளும் முகத்தலை யகத்தமர்ந் தடியேன் விழுங்குதீங் கனியாய் இனியஆ னந்த வெள்ளமாய் உள்ளமா யினையே.
| [2] |
கன்னகா உள்ளக் கள்வனேன் நின்கண் கசிவிலேன் கண்ணின்நீர் சொரியேன் முன்னகா வொழியேன் ஆயினும் செழுநீர் முகத்தலை யகத்தமர்ந் துறையும் பன்னகா பரணா பவளவாய் மணியே பாவியேன் ஆவியுள் புகுந்த தென்னகா ரணம்நீ ஏழைநா யடியேற் கெளிமையோ பெருமையா வதுவே.
| [3] |
கேடிலா மெய்ந்நூல் கெழுமியுஞ் செழுநீர்க் கிடையனா ருடையஎன் னெஞ்சிற் பாடிலா மணியே மணியுமிழ்ந் தொளிரும் பரமனே பன்னகா பரணா மேடெலாஞ் செந்நெற் பசுங்கதிர் விளைந்து மிகத்திகழ் முகத்தலை மூதூர் நீடினா யெனினும் உள்புகுந் தடியேன் நெஞ்செலாம் நிறைந்துநின் றாயே.
| [4] |
அக்கனா அனைய செல்வமே சிந்தித் தைவரோ டென்னொடும் விளைந்த இக்கலாம் முழுதும் ஒழியவந் துள்புக் கென்னையாள் ஆண்ட நாயகனே முக்கணா யகனே முழுதுல கிறைஞ்ச முகத்தலை யகத்தமர்ந் தடியேன் பக்கலா னந்தம் இடையறா வண்ணம் பண்ணினாய் பவளவாய் மொழிந்தே.
| [5] |
புனல்பட உருகி மண்டழல் வெதும்பிப் பூம்புனல் பொதிந்துயிர் அளிக்கும் வினைபடு நிறைபோல் நிறைந்தவே தகத்தென் மனம்நெக மகிழ்ந்தபே ரொளியே முனைபடு மதில்மூன் றெரித்த நாயகனே முகத்தலை யகத்தமர்ந் தடியேன் வினைபடும் உடல்நீ புகுந்துநின் றமையால் விழுமிய விமானமா யினதே.
| [6] |
விரியும்நீ ராலக் கருமையின் சாந்தின் வெண்மையும் செந்நிறத் தொளியும் கரியும்நீ றாடுங் கனலும்ஒத் தொளிருங் கழுத்தில்ஓர் தனிவடங் கட்டி முரியுமா றெல்லாம் முரிந்தழ கியையாய் முகத்தலை யகத்தமர்ந் தாயைப் பிரியுமா றுளதே பேய்களோம் செய்த பிழைபொறுத் தாண்டபே ரொளியே.
| [7] |
என்னைஉன் பாத பங்கயம் பணிவித் தென்பெலாம் உருகநீ எளிவந் துன்னைஎன் பால்வைத் தெங்கும்எஞ் ஞான்றும் ஒழிவற நிறைந்தஒண் சுடரே முன்னைஎன் பாசம் முழுவதும் அகல முகத்தலை யகத்தமர்ந் தெனக்கே கன்னலும் பாலும் தேனும்ஆ ரமுதும் கனியுமாய் இனியைஆ யினையே.
| [8] |
அம்பரா அனலா அனிலமே புவிநீ அம்புவே இந்துவே இரவி உம்பரால் ஒன்றும் அறிவொணா அணுவாய் ஒழிவற நிறைந்தஒண் சுடரே மொய்ம்பராய் நலஞ்சொல் மூதறி வாளர் முகத்தலை யகத்தமர்ந் தெனக்கே எம்பிரா னாகி ஆண்டநீ மீண்டே எந்தையும் தாயும்ஆ யினையே.
| [9] |
மூலமாய் முடிவாய் முடிவிலா முதலாய் முகத்தலை யகத்தமர்ந் தினிய பாலுமாய் அமுதாம் பன்னகா பரணன் பனிமலர்த் திருவடி யிணைமேல் ஆலைஅம் பாகின் அனையசொற் கருவூர் அமுதுறழ் தீந்தமிழ் மாலை சீலமாப் பாடும் அடியவர் எல்லாம் சிவபதம் குறுகிநின் றாரே.
| [10] |
Back to Top
கருவூர்த் தேவர் திருவிசைப்பா
9.012  
கருவூர்த் தேவர் - திரைலோக்கிய சுந்தரம்
பண் - (திருத்தலம் பொது -திரைலோக்கிய சுந்தரம் ; அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
நீரோங்கி வளர்கமலம் நீர்பொருந்தாத் தன்மையன்றே ஆரோங்கிமுகம் மலர்ந்தாங் கருவினையேன் திறம்மறந்தின் றூரோங்கும் பழிபாரா துன்பாலே விழுந்தொழிந்தேன் சீரோங்கும் பொழிற்கோடைத் திரைலோக்கிய சுந்தரனே.
| [1] |
நையாத மனத்தினனை நைவிப்பான் இத்தெருவே ஐயாநீ உலாப்போந்த அன்றுமுதல் இன்றுவரை கையாரத் தொழுதருவி கண்ணாரச் சொரிந்தாலும் செய்யாயோ அருள் கோடைத் திரைலோக்கிய சுந்தரனே.
| [2] |
அம்பளிங்கு பகலோன்பால் அடைபற்றாய் இவள்மனத்தின் முன்பளிந்த காதலும்நின் முகந்தோன்ற விளங்கிற்றால் வம்பளிந்த கனியேஎன் மருந்தேநல் வளர்முக்கட் செம்பளிங்கே பொழிற்கோடைத் திரைலோக்கிய சுந்தரனே.
| [3] |
மைஞ்ஞின்ற குழலாள்தன் மனம்தரவும் வளைதாரா திஞ்ஞின்ற கோவணவன் இவன்செய்த தியார்செய்தார் மெய்ஞ்ஞின்ற தமர்க்கெல்லாம் மெய்ஞ்ஞிற்கும் பண்பினுறு செய்ஞ்ஞன்றி யிலன்கோடைத் திரைலோக்கிய சுந்தரனே.
| [4] |
நீவாரா தொழிந்தாலும் நின்பாலே விழுந்தேழை கோவாத மணிமுத்தும் குவளைமலர் சொரிந்தனவால் ஆவாஎன் றருள்புரியாய் அமரர்கணம் தொழுதேத்தும் தேவாதென் பொழிற்கோடைத் திரைலோக்கிய சுந்தரனே.
| [5] |
முழுவதும்நீ யாயினும்இம் மொய்குழலாள் மெய்ம்முழுதும் பழுதெனவே நினைந்தோராள் பயில்வதும்நின் னொருநாமம் அழுவதும்நின் திறம்நினைந்தே அதுவன்றோ பெறும்பேறு செழுமதில்சூழ் பொழிற்கோடைத் திரைலோக்கிய சுந்தரனே.
| [6] |
தன்சோதி எழுமேனித் தபனியப்பூச் சாய்க்காட்டாய் உன்சோதி எழில்காண்பான் ஓலிடவும் உருக்காட்டாய் துஞ்சாக்கண் ணிவளுடைய துயர்தீரும் ஆறுரையாய் செஞ்சாலி வயற்கோடைத் திரைலோக்கிய சுந்தரனே.
| [7] |
அரும்பேதைக் கருள்புரியா தொழிந்தாய்நின் அவிர்சடைமேல் நிரம்பாத பிறைதூவும் நெருப்பொடுநின் கையிலியாழ் நரம்பாலும் உயிரீர்ந்தாய் நளிர்புரிசைக் குளிர்வனம்பா திரம்போது சொரிகோடைத் திரைலோக்கிய சுந்தரனே.
| [8] |
ஆறாத பேரன்பி னவர்உள்ளம் குடிகொண்டு வேறாகப் பலர்சூழ வீற்றிருத்தி அதுகொண்டு வீறாடி இவள்உன்னைப் பொதுநீப்பான் விரைந்தின்னம் தேறாள்தென் பொழிற்கோடைத் திரைலோக்கிய சுந்தரனே.
| [9] |
சரிந்ததுகில் தளர்ந்தஇடை அவிழ்ந்தகுழல் இளந்தெரிவை இருந்தபரி சொருநாள்கண் டிரங்காய்எம் பெருமானே முரிந்தநடை மடந்தையர்தம் முழங்கொலியும் வழங்கொலியும் திருந்துவிழ வணிகோடைத் திரைலோக்கிய சுந்தரனே.
| [10] |
ஆரணத்தேன் பருகிஅருந் தமிழ்மாலை கமழவரும் காரணத்தின் நிலைபெற்ற கருவூரன் தமிழ்மாலை பூரணத்தார் ஈரைந்தும் போற்றிசைப்பார் காந்தாரம் சீரணைத்த பொழிற்கோடைத் திரைலோக்கிய சுந்தரனே.
| [11] |
Back to Top
கருவூர்த் தேவர் திருவிசைப்பா
9.013  
கருவூர்த் தேவர் - கங்கைகொண்ட சோளேச்சரம்
பண் - (திருத்தலம் கங்கைகொண்ட சோழீசுவரர் ; அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
அ ன்னமாய் விசும்பு பறந்தயன் தேட அங்ஙனே பெரியநீ சிறிய என்னையாள் விரும்பி என்மனம் புகுந்த எளிமையை என்றும்நான் மறக்கேன் முன்னம்மால் அறியா ஒருவனாம் இருவா முக்கணா நாற்பெருந் தடந்தோள் கன்னலே தேனே அமுதமே கங்கை கொண்டசோ ளேச்சரத் தானே.
| [1] |
உண்ணெகிழ்ந்(து) உடலம் நெக்குமுக் கண்ணா ! ஓலமென்(று) ஓலமிட்(டு) ஒருநாள் மண்ணினின்று அலறேன் வழிமொழி மாலை மழலையஞ் சிலம்படி முடிமேல் பண்ணிநின்(று) உருகேன் பணிசெயேன் எனினும் பாவியேன் ஆவியுள் புகுந்தென் கண்ணினின்று அகலான் என்கொலோ கங்கை கொண்டசோ ளேச்சரத் தானே.
| [2] |
அற்புதத்தெய்வம் இதனின்மற் றுண்டே அன்பொடு தன்னைஅஞ் செழுத்தின் சொற்பதத் துள்வைத்(து) உள்ளம்அள் ளூறும் தொண்டருக்(கு) எண்டிசைக் கனகம் பற்பதக் குவையும் பைம்பொன்மா ளிகையும் பவளவா யவர்பணை முலையும் கற்பகப் பொழிலும் முழுதுமாம் கங்கை கொண்டசோ ளேச்சரத் தானே.
| [3] |
ஐயபொட் டிட்ட அழகுவாள் நுதலும் அழகிய விழியும்வெண்ணீறும் சைவம்விட் டிட்ட சடைகளும் சடைமேல் தரங்கமும் சதங்கையும் சிலம்பும் மொய்கொள்எண் திக்கும் கண்டநின் தொண்டர் முகமலர்ந்து இருகணீர் அரும்பக் கைகள்மொட் டிக்கும் என்கொலோ கங்கை கொண்டசோ ளேச்சரத் தானே !
| [4] |
கருதிவா னவனாம் திருநெடு மாலாம் சுந்தர விசும்பின்இந் திரனாம் பருதிவா னவனாம் படர்சடை முக்கண் பகவனாம் அகஉயிர்க்கு அமுதாம் எருதுவா கனனாம் எயில்கள் மூன்(று) எரித்த ஏறுசே வகனுமாம் பின்னும் கருதுவார் கருதும் உருவமாம் கங்கை கொண்டசோ ளேச்சரத் தானே.
| [5] |
அண்டமோர் அணுவாம் பெருமைகொண்(டு) அணுவோர் அண்டமாம் சிறுமைகொண்(டு) அடியேன் உண்டவூண் உனக்காம் வகைஎன துள்ளம் உள்கலந்(து) ஏழுபரஞ் சோதி கொண்டநாண் பாம்பாம் பெருவரை வில்லில் குறுகலர் புரங்கள் மூன்(று) எரித்த கண்டனே ! நீல கண்டனே ! கங்கை கொண்டசோ ளேச்சரத் தானே!
| [6] |
மோதலைப் பட்ட கடல்வயி(று) உதித்த முழுமணித் திரள்அமு(து) ஆங்கே தாய்தலைப் பட்டங்(கு) உருகிஒன் றாய தன்மையில் என்னைமுன் ஈன்ற நீதலைப் பட்டால் யானும் அவ்வகையே நிசிசரர் இருவரோடு ஒருவர் காதலிற் பட்ட கருணையாய் கங்கை கொண்டசோ ளேச்சரத் தானே.
| [7] |
தத்தையங் கனையார் தங்கள்மேல் வைத்த தயாவைநூ றாயிரங் கூறிட்(டு) அத்திலங்(கு) ஒருகூ(று) உன்கண்வைத் தவருக்(கு) அமருல(கு) அளிக்கும்நின் பெருமை பித்தனென்(று) ஒருகால் பேசுவ ரேனும் பிழைத்தவை பொறுத்தருள் செய்யும் கைத்தலம் அடியேன் சென்னிமேல்வைத்த கங்கை கொண்டசோ ளேச்சரத் தானே.
| [8] |
பண்ணிய தழல்காய் பாலளா நீர்போல் பாவமுன் பறைந்துபா லனைய புண்ணியம் பின்சென்(று) அறிவினுக்(கு) அறியப் புகுந்ததோர் யோகினில் பொலிந்து நுண்ணியை எனினும் நம்பநின் பெருமை நுன்னிடை ஒடுங்கநீ வந்தென் கண்ணினுள் மணியிற் கலந்தனை கங்கை கொண்டசோ ளேச்சரத் தானே.
| [9] |
அங்கைகொண்(டு) அமரர் மலர்மழை பொழிய அடிச்சிலம்பு அலம்பவந்(து) ஒருநாள் உங்கைகொண் டடியேன் சென்னிவைத் தென்னை உய்யக்கொண் டருளினை மருங்கில் கொங்கைகொண்(டு) அனுங்கும் கொடியிடை காணில் கொடியள்என்(று) அவிர்சடை முடிமேல் கங்கைகொண் டிருந்த கடவுளே ! கங்கை கொண்டசோ ளேச்சரத் தானே.
| [10] |
மங்கையோ டிருந்தே யோகுசெய் வானை வளர்இளந் திங்களை முடிமேல் கங்கையோ(டு) அணியும் கடவுளைக் கங்கை கொண்டசோ ளேச்சரத் தானை அங்கையோ டேந்திப் பலிதிரி கருவூர் அறைந்தசொல் மாலையால் ஆழிச் செங்கையோ(டு) உலகில் அரசுவீற் றிருந்து திளைப்பதும் சிவனருட் கடலே. . | [11] |
Back to Top
கருவூர்த் தேவர் திருவிசைப்பா
9.014  
கருவூர்த் தேவர் - திருப்பூவணம்
பண் - (திருத்தலம் திருப்பூவணம் ; அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
திருவருள் புரிந்தாள் ஆண்டுகொண் டிங்ஙன் சிறியனுக் கினியது காட்டிப் பெரிதருள் புரிந்தா னந்தமே தரும்நின் பெருமையிற் பெரியதொன் றுளதே மருதர சிருங்கோங் ககில்மரம் சாடி வரைவளங் கவர்ந்திழி வையைப் பொருதிரை மருங்கோங் காவண வீதிப் பூவணம் கோயில்கொண் டாயே.
| [1] |
பாம்பணைத் துயின்றோன் அயன்முதல் தேவர் பன்னெடுங் காலம்நிற் காண்பான் ஏம்பலித் திருக்க என்னுளம் புகுந்த எளிமையை என்றும்நான் மறக்கேன் தேம்புனற் பொய்கை வாளைவாய் மடுப்பத் தெளிதரு தேறல்பாய்ந் தொழுகும் பூம்பணைச்சோலை ஆவண வீதிப் பூவணம் கோயில்கொண் டாயே.
| [2] |
கரைகடல் ஒலியின் தமருகத் தரையிற் கையினிற் கட்டிய கயிற்றால் இருதலை ஒருநா இயங்கவந் தொருநாள் இருந்திடாய் எங்கள்கண் முகப்பே விரிதிகழ் விழவின் பின்செல்வோர் பாடல் வேட்கையின் வீழ்ந்தபோ தவிழ்ந்த புரிசடை துகுக்கும் ஆவண வீதிப் பூவணம் கோயில்கொண் டாயே.
| [3] |
கண்ணியல் மணியின் சூழல்புக் கங்கே கலந்துபுக் கொடுங்கினேற் கங்ஙன் நுண்ணியை யெனினும் நம்ப நின் பெருமை நுண்ணிமை யிறந்தமை அறிவன் மண்ணியல் மரபின் தங்கிருள் மொழுப்பின் வண்டினம் பாடநின் றாடும் புண்ணிய மகளிர் ஆவண வீதிப் பூவணம் கோயில்கொண் டாயே.
| [4] |
கடுவினைப் பாசக் கடல்கடந் தைவர் கள்ளரை மெள்ளவே துரந்துன் அடியிணை இரண்டும் அடையுமா றடைந்தேன் அருள்செய்வாய் அருள்செயா தொழிவாய் நெடுநிலை மாடத் திரவிருள் கிழிக்க நிலைவிளக் கலகில்சா லேகப் புடைகிடந் திலங்கும் ஆவண வீதிப் பூவணம் கோயில்கொண் டாயே.
| [5] |
செம்மனக் கிழவோர் அன்பு தாஎன்றுன் சேவடி பார்த்திருந் தலச எம்மனம் குடிகொண் டிருப்பதற் கியான்ஆர் என்னுடை அடிமைதான் யாதே அம்மனங் குளிர்நாட் பலிக்கெழுந் தருள அரிவையர் அவிழ்குழற் சுரும்பு பொம்மென முரலும் ஆவண வீதிப் பூவணம் கோயில்கொண் டாயே.
| [6] |
சொன்னவில் முறைநான் காரணம் உணராச் சூழல்புக் கொளித்தநீ யின்று கன்னவில் மனத்தென் கண்வலைப் படும்இக் கருணையிற் பெரியதொன் றுளதே மின்னவில் கனக மாளிகை வாய்தல் விளங்கிளம் பிறைதவழ் மாடம் பொன்னவில் புரிசை ஆவண வீதிப் பூவணம் கோயில்கொண் டாயே.
| [7] |
இப்பாடல் கிடைக்கவில்லை.
| [8] |
இப்பாடல் கிடைக்கவில்லை.
| [9] |
பூவணம் கோயில் கொண்டெனை ஆண்ட புனிதனை வனிதை பாகனை வெண் கோவணங் கொண்டு வெண்டலை ஏந்தும் குழகனை அழகெலாம் நிறைந்த தீவணன் றன்னைச் செழுமறை தெரியுந் திகழ்கரு வூரனேன் உரைத்த பாவணத் தமிழ்கள் பத்தும்வல் லார்கள் பரமன துருவமா குவரே.
| [10] |
Back to Top
கருவூர்த் தேவர் திருவிசைப்பா
9.015  
கருவூர்த் தேவர் - திருச்சாட்டியக்குடி
பண் - (திருத்தலம் திருச்சாட்டியக்குடி ; அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
பெரியவா கருணை இளநிலா வெறிக்கும் பிறைதவழ் சடைமொழுப் பவிழ்ந்து சரியுமா சுழியம் குழைமிளிர்ந் திருபால் தாழ்ந்தவா காதுகள் கண்டம் கரியவா தாமும் செய்யவாய் முறுவல் காட்டுமா சாட்டியக் குடியார் இருகைகூம் பினகண் டலர்ந்தவா முகம்ஏழ் இருக்கையில் இருந்தஈ சனுக்கே.
| [1] |
பாந்தள்பூ ணாரம் பரிகலங் கபாலம் பட்டவர்த் தனம்எரு தன்பர் வார்ந்தகண் ணருவி மஞ்சன சாலை மலைமகள் மகிழ்பெருந் தேவி சாந்தமும் திருநீ றருமறை கீதம் சடைமுடி சாட்டியக் குடியார் ஏந்தெழில் இதயங் கோயில் மா ளிகைஏழ் இருக்கையுள் இருந்தஈ சனுக்கே.
| [2] |
தொழுதுபின் செல்வ தயன்முதற் கூட்டம் தொடர்வன மறைகள்நான் கெனினும் கழுதுறு கரிகா டுறைவிடம் போர்வை கவந்திகை கரியுரி திரிந்தூண் தழலுமிழ் அரவம் கோவணம் பளிங்கு சபவடம் சாட்டியக் குடியார் இழுதுநெய் சொரிந்தோம் பழல்ஒளி விளக்கேழ் இருக்கையில் இருந்தஈ சனுக்கே.
| [3] |
பதிகம்நான் மறைதும் புருவும்நா ரதரும் பரிவொடு பாடுகாந் தர்ப்பர் கதியெலாம் அரங்கம் பிணையல்மூ வுலகில் கடியிருள் திருநடம் புரியும் சதியிலார் கலியில் ஒலிசெயும் கையில் தமருகம் சாட்டியக் குடியார் இதயமாம் கமலம் கமலவர்த் தனைஏழ் இருக்கையில் இருந்தஈ சனுக்கே.
| [4] |
திருமகன் முருகன் தேவியேல் உமையாள் திருமகள் மருமகன் தாயாம் மருமகன் மதனன் மாமனேல் இமவான் மலையுடை யரையர்தம் பாவை தருமனை வளனாம் சிவபுரன் தோழன் தனபதி சாட்டியக் குடியார் இருமுகம் கழல்மூன் றேழுகைத் தலம்ஏழ் இருக்கையில் இருந்தஈ சனுக்கே.
| [5] |
அனலமே புனலே அனிலமே புவனி அம்பரா அம்பரத் தளிக்கும் கனகமே வெள்ளிக் குன்றமே என்றன் களைகணே களைகண்மற் றில்லாத் தனியனேன் உள்ளம் கோயில்கொண் டருளும் சைவனே சாட்டியக் குடியார்க் கினியதீங் கனியாய் ஒழிவற நிறைந்தேழ் இருக்கையில் இருந்தவா றியம்பே.
| [6] |
செம்பொனே பவளக் குன்றமே நின்ற திசைமுகன் மால்முதற் கூட்டத் தன்பரா னவர்கள் பருகும்ஆ ரமுதே அத்தனே பித்தனே னுடைய சம்புவே அணுவே தாணுவே சிவனே சங்கரா சாட்டியக் குடியார்க் கின்பனே எங்கும் ஒழிவற நிறைந்தேழ் இருக்கையில் இருந்தவா றியம்பே.
| [7] |
செங்கணா போற்றி திசைமுகா போற்றி சிவபுர நகருள்வீற் றிருந்த அங்கணா போற்றி அமரனே போற்றி அமரர்கள் தலைவனே போற்றி தங்கணான் மறைநூல் சகலமுங் கற்றோர் சாட்டியக் குடியிருந் தருளும் எங்கணா யகனே போற்றிஏ ழிருக்கை யிறைவனே போற்றியே போற்றி
| [8] |
சித்தனே அருளாய் செங்கணா அருளாய் சிவபுர நகருள்வீற் றிருந்த அத்தனே அருளாய் அமரனே அருளாய் அமரர்கள் அதிபனே அருளாய் தத்துநீர்ப் படுகர்த் தண்டலைச் சூழல் சாட்டியக் குடியுள்ஏ ழிருக்கை முத்தனே அருளாய் முதல்வனே அருளாய் முன்னவா துயர்கெடுத் தெனக்கே.
| [9] |
தாட்டரும் பழனப் பைம்பொழிற் படுகர்த் தண்டலைச் சாட்டியக் குடியார் ஈட்டிய பொருளாய் இருக்கும்ஏ ழிருக்கை இருந்தவன் திருவடி மலர்மேற் காட்டிய பொருட்கலை பயில்கரு வூரன் கழறுசொன் மாலைஈ ரைந்தும் மாட்டிய சிந்தை மைந்தருக் கன்றே வளரொளி விளங்குவா னுலகே.
| [10] |
Back to Top
கருவூர்த் தேவர் திருவிசைப்பா
9.016  
கருவூர்த் தேவர் - தஞ்சை இராசராசேச்சரம்
பண் - (திருத்தலம் தஞ்சை இராசராசேச்சரம் ; அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
உலகெலாம் தொழவந் தெழுக திர்ப்பரிதி ஒன்றுநூ றாயிர கோடி அலகெலாம் பொதிந்த திருவுடம் பச்சோ அங்ஙனே யழகிதோ அரணம் பலகுலாம் படைசெய் நெடுநிலை மாடம் பருவரை ஞாங்கர்வெண் டிங்கள் இலைகுலாம் பதணத் திஞ்சிசூழ் தஞ்சை இராசரா சேச்சரத் திவர்க்கே.
| [1] |
நெற்றியிற் கண்ணென் கண்ணினின் றகலா நெஞ்சினில் அஞ்சிலம் பலைக்கும் பொற்றிரு வடிஎன் குடிமுழு தாளப் புகுந்தன போந்தன வில்லை மற்றெனக் குறவென் மறிதிரை வடவாற் றிடுபுனல் மதகில்வாழ் முதலை எற்றுநீர்க் கிடங்கின் இஞ்சிசூழ் தஞ்சை இராசரா சேச்சரத் திவர்க்கே.
| [2] |
சடைகெழு மகுடம் தண்ணிலா விரிய வெண்ணிலா விரிதரு தரளக் குடைநிழல் விடைமேற் கொண்டுலாப் போதும் குறிப்பெனோ கோங்கிண ரனைய குடைகெழு நிருபர் முடியொடு முடிதேய்ந் துக்கசெஞ் சுடர்ப்படு குவையோங் கிடைகெழு மாடத் திஞ்சிசூழ் தஞ்சை இராசரா சேச்சரத் திவர்க்கே.
| [3] |
வாழிஅம் போதத் தருகுபாய் விடயம் வரிசையின் விளங்கலின் அடுத்த சூழலம் பளிங்கின் பாசல ராதிச் சுடர்விடு மண்டலம் பொலியக் காழகில் கமழு மாளிகை மகளிர் கங்குல்வாய் அங்குலி கெழும யாழொலி சிலம்பும் இஞ்சிசூழ் தஞ்சை இராசரா சேச்சரத் திவர்க்கே.
| [4] |
எவருமா மறைகள் எவையும்வா னவர்கள் ஈட்டமும் தாட்டிருக் கமலத் தவருமா லவனும் அறிவரும் பெருமை அடல்அழல் உமிழ்தழல் பிழம்பர் உவரிமா கடலின் ஒலிசெய்மா மறுகில் உறுகளிற் றரசின தீட்டம் இவருமால் வரைசெய் இஞ்சிசூழ் தஞ்சை இராசரா சேச்சரத் திவர்க்கே.
| [5] |
அருளுமா றருளி ஆளுமா றாள அடிகள்தம் அழகிய விழியும் குருளும்வார் காதும் காட்டியான் பெற்ற குயிலினை மயல்செய்வ தழகோ தரளவான் குன்றில் தண்ணிலா ஒளியும் தருகுவால் பெருகுவான் தெருவில் இருளெலாங் கிழியும் இஞ்சிசூழ் தஞ்சை இராசரா சேச்சரத் திவர்க்கே.
| [6] |
தனிப்பெருந் தாமே முழுதுறப் பிறப்பின் தளிர்இறப் பிலையுதிர் வென்றால் நினைப்பருந் தம்பாற் சேறலின் றேனும் நெஞ்சிடிந் துருகுவ தென்னோ சுனைப்பெருங் கலங்கற் பொய்கையங் கழுநீர்ச் சூழல்மா ளிகைசுடர் வீசும் எனைப்பெரு மணஞ்செய் இஞ்சிசூழ் தஞ்சை இராசரா சேச்சரத் திவர்க்கே.
| [7] |
பன்னெடுங் காலம் பணிசெய்து பழையோர் தாம்பலர் ஏம்பலித் திருக்க என்னெடுங் கோயில் நெஞ்சுவீற் றிருந்த எளிமையை யென்றுநான் மறக்கேன் மின்னெடும் புருவத் திளமயி லனையார் விலங்கல்செய் நாடக சாலை இன்னடம் பயிலும் இஞ்சிசூழ் தஞ்சை இராசரா சேச்சரத் திவர்க்கே.
| [8] |
மங்குல்சூழ் போதின் ஒழிவற நிறைந்து வஞ்சகர் நெஞ்சகத் தொளிப்பார்; அங்கழற் சுடராம் அவர்க்கிள வேனல் அலர்கதி ரனையர் வா ழியரோ பொங்கெழில் திருநீ றழிபொசி வனப்பிற் புனல்துளும் பவிர்சடை மொழுப்பர் எங்களுக் கினியர் இஞ்சிசூழ் தஞ்சை இராசாரா சேச்சரத் திவர்க்கே.
| [9] |
தனியர்எத் தனைஓ ராயிர வருமாந் தன்மையர் என்வயத் தினராங் கனியர்அத் தருதீங் கரும்பர்வெண் புரிநூற் கட்டியர் அட்டஆ ரமிர்தர் புனிதர்பொற் கழலர் புரிசடா மகுடர் புண்ணியர் பொய்யிலா மெய்யர்க் கினியரெத் தனையும் இஞ்சிசூழ் தஞ்சை இராசரா சேச்சரத் திவர்க்கே.
| [10] |
சரளமந் தார சண்பக வகுள சந்தன நந்தன வனத்தின் இருள்விரி மொழுப்பின் இஞ்சிசூழ் தஞ்சை இராசரா சேச்சரத் திவரை அருமருந் தருந்தி அல்லல்தீர் கருவூர் அறைந்தசொன் மாலைஈ ரைந்தின் பொருள்மருந் துடையோர் சிவபத மென்னும் பொன்னெடுங் குன்றுடை யோரே.
| [11] |
Back to Top
கருவூர்த் தேவர் திருவிசைப்பா
9.017  
கருவூர்த் தேவர் - திருவிடைமருதூர்
பண் - (திருத்தலம் திருவிடைமருதூர் ; அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
வெய்யசெஞ் சோதி மண்டலம் பொலிய வீங்கிருள் நடுநல்யா மத்தோர் பையசெம் பாந்தள் பருமணி யுமிழ்ந்து பாவியேன் காதல்செய் காதில் ஐயசெம் பொன்தோட் டவிர்சடை மொழுப்பின் அழிவழ கியதிரு நீற்று மையசெங் கண்டத் தண்டவா னவர்கோன் மருவிடந் திருவிடை மருதே.
| [1] |
இந்திர லோக முழுவதும் பணிகேட் டிணையடி தொழுதெழத் தாம்போய் ஐந்தலை நாக மேகலை யரையா அகந்தொறும் பலிதிரி யடிகள் தந்திரி வீணை கீதமுன் பாடச் சாதிகின் னரங்கலந் தொலிப்ப மந்திர கீதம் தீங்குழல் எங்கும் மருவிடந் திருவிடை மருதே.
| [2] |
பனிபடு மதியம் பயில்கொழுந் தன்ன பல்லவம் வல்லியென் றிங்ஙன் வினைபடு கனகம் போலயா வையுமாய் வீங்குல கொழிவற நிறைந்து துனிபடு கலவி மலைமக ளுடனாய்த் தூங்கிருள் நடுநல்யா மத்தென் மனனிடை யணுகி நுணுகியுள் கலந்தோன் மருவிடந் திருவிடை மருதே.
| [3] |
அணியுமிழ் சோதி மணியினுள் கலந்தாங் கடியனே னுள்கலந் தடியேன் பணிமகிழ்ந் தருளும் அரிவைபா கத்தன் படர்சடை விடமிடற் றடிகள் துணியுமி ழாடை அரையில்ஓர் ஆடை சுடர்உமிழ் தரஅத னருகே மணியுமிழ் நாக மணியுமிழ்ந் திமைப்ப மருவிடந் திருவிடை மருதே.
| [4] |
பந்தமும் பிரிவும் தெரிபொருட் பனுவற் படிவழி சென்றுசென் றேறிச் சிந்தையுந் தானுங் கலந்ததோர் கலவி தெரியினுந் தெரிவுறா வண்ணம் எந்தையுந் தாயும் யானுமென் றிங்ஙன் எண்ணில்பல் லூழிக ளுடனாய் வந்தணு காது நுணுகியுள் கலந்தோன் மருவிடந் திருவிடை மருதே.
| [5] |
எரிதரு கரிகாட் டிடுபிண நிணமுண் டேப்பமிட் டிலங்கெயிற் றழல்வாய்த் துருகழல் நெடும்பேய்க் கணமெழுந் தாடுந் தூங்கிருள் நடுநல்யா மத்தே அருள்புரி முறுவல் முகிழ்நிலா எறிப்ப அந்திபோன் றொளிர்திரு மேனி வரியர வாட ஆடும்எம் பெருமான் மருவிடந் திருவிடை மருதே.
| [6] |
எழிலையாழ் செய்கைப் பசுங்கலன் விசும்பின் இன்துளி படநனைந் துருகி அழலையாழ் புருவம் புனலொடுங் கிடந்தாங் காதனேன் மாதரார் கலவித் தொழிலை ஆழ்நெஞ்சம் இடர்படா வண்ணம் தூங்கிருள் நடுநல்யா மத்தோர் மழலையாழ் சிலம்ப வந்தகம் புகுந்தோன் மருவிடந் திருவிடை மருதே.
| [7] |
வையவாம் பெற்றம் பெற்றம்ஏ றுடையார் மாதவர் காதல்வைத் தென்னை வெய்யவாஞ் செந்தீப் பட்டஇட் டிகைபோல் விழுமியோன் முன்புபின் பென்கோ நொய்யவா றென்ன வந்துள்வீற் றிருந்த நூறுநூ றாயிர கோடி மையவாங் கண்டத் தண்டவா னவர்கோன் மருவிடந் திருவிடை மருதே.
| [8] |
கலங்கலம் பொய்கைப் புனல்தெளி விடத்துக் கலந்தமண் ணிடைக்கிடந் தாங்கு நலங்கலந் தடியேன் சிந்தையுட் புகுந்த நம்பனே வம்பனே னுடைய புலங்கலந் தவனே என்றுநின் றுருகிப் புலம்புவார் அவம்புகார் அருவி மலங்கலங் கண்ணிற் கண்மணி யனையான் மருவிடந் திருவிடை மருதே.
| [9] |
ஒருங்கிரு கண்ணின் எண்ணில்புன் மாக்கள் உறங்கிருள் நடுநல்யா மத்தோர் கருங்கண்நின் றிமைக்குஞ் செழுஞ்சுடர் விளக்கங் கலந்தெனக் கலந்துணர் கருவூர் தருங்கரும் பனைய தீந்தமிழ் மாலை தடம்பொழில் மருதயாழ் உதிப்ப வருங்கருங் கண்டத் தண்டவா னவர்கோன் மருவிடந் திருவிடை மருதே.
| [10] |